‘தீரன்’ பட பாணியில் தரமான சம்பவம்... ஹரியானாவில் பதுங்கியிருந்த கொள்ளையனை அலேக்காக தூக்கிய தனிப்படை!
தலைமறைவான 4 பேர் கொண்ட கொள்ளை கும்பலை பிடிக்க ஐ.பி.எஸ் அதிகாரிகள் தலைமையிலான 2 தனிப்படை போலீசார் ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களுக்குச் சென்று தேடுதல் வேட்டை நடத்தினர்.
சென்னையில் வளசரவாக்கம், தரமணி, விருகம்பாக்கம், வேளச்சேரி, வடபழனி, கீழ்பாக்கம், பெரிய மேடு, பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பணம் டெபாசிட் செய்யும் எஸ்.பி.ஐ. ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து நூதன முறையில் ரூ.20 லட்சம் வரை பணம் திருடப்பட்டது. எஸ்.பி.ஐ. வங்கியின் கேஷ் டெபாசிட் மெஷினில் ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தி பின் நம்பர் செலுத்தினால், பணமானது வெளியே வரும். அவ்வாறு ஏ.டி.எம் மிஷினில் இருந்து வெளிவந்த பணத்தை 20 நொடிகளுக்குள் எடுக்கவில்லை எனில் மீண்டும் பணம் மெஷினுக்கு உள்ளேயே திரும்பிவிடும். இந்த தொழில் நுட்பத்தை தெரிந்து கொண்ட கொள்ளை கும்பல் கைவரிசையக் காட்டியுள்ளது.
சென்னையில் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் சுமார் 50 லட்சம் வரை எஸ்.பி.ஐ. பணம் டெபாசிட் செய்யும் இயந்திரங்களில் கொள்ளை போனது கண்டறியப்பட்டுள்ளது. இந்த கொள்ளை கும்பல் டெல்லியைச் சேர்ந்தவர்கள் என்பதையும், கடந்த 19 மற்றும் 20ம் தேதிகளில் இருசக்கர வாகனத்தை வாடிக்கைக்கு எடுத்த இவர்கள் சென்னையில் உள்ள ஏ.டி.எம் மையங்களில் கொள்ளையில் ஈடுபட்டதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. தற்போது அந்த கும்பல் ஹரியானாவில் பதுங்கியிருக்கலாம் என போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து தலைமறைவான 4 பேர் கொண்ட கொள்ளை கும்பலை பிடிக்க ஐ.பி.எஸ் அதிகாரிகள் தலைமையிலான 2 தனிப்படை போலீசார் ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களுக்குச் சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். இந்நிலையில் இன்று காலை ஹரியானாவில் பதுங்கியிருந்த ஒருவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அவருக்கு தமிழகத்தில் நடந்த ஏ.டி.எம். கொள்ளையில் தொடர்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் குற்றவாளியின் பெயர் மற்றும் பிற விவரங்களை போலீசார் வெளியிடவில்லை. இதனை வெளியிட்டால் பிற கொள்ளையர்கள் உஷாராகிவிடுவார்கள் என்பதால் பிடிப்பட்ட குற்றவாளியின் விவரங்கள், புகைப்படங்கள் வெளியிடப்படாது என தெரிவித்துள்ளனர்.