தீவிரமடையும் கொடநாடு கொலை வழக்கு..! கோவையில் 3 பேரிடம் சிபிசிஐடி போலீஸ் ரகசிய விசாரணை
கொடநாடு கொலை வழக்கில் சிபிசிஐடி விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இன்று கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் 3 பேரிடம் சிபிசிஐடி போலீசார் ரகசிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொடநாடு கொலை வழக்கு
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் கடந்த 2017ஆம் ஆண்டு கொள்ளை முயற்சி நடைபெற்றது. கிருஷ்ணதாபா, ஓம்பகதூர் ஆகிய இருவரும் இரவு காவல் பணியில் இருந்தபோது கொள்ளையர்கள், எஸ்டேட்டுக்குள் நுழைந்து ஓம்பகதூரை கொலை செய்துள்ளனர். இதனையடுத்து பங்களாவிற்குள் சென்ற கொள்ளை கும்பல் ஜெயலலிதா மற்றும் சசிகலா தங்கும் அறைகளில் இருந்த பல்வேறு ஆவணங்கள் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து சென்றது. இந்த கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ், கேரளாவை சேர்ந்த சாயன், வாளையார் மனோஜ், தீபு, சந்தோஷ் சாமி, ஜித்தன் ஜாய், ஜெம்சீர் அலி உட்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
நேபாளத்திற்கு செல்லும் சிபிசிஐடி
இந்த வழக்கை தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கை விரைந்து முடிக்க சிபிசிஐடி போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கொடநாடு கொலை நடந்த சமயத்தில் காவல் பணியில் இருந்த கிருஷ்ணதாபா அங்கிருந்து தப்பித்து தற்போது தன் குடும்பத்துடன் நேபாளில் வசித்து வருகிறார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தவும் சிபிசிஐடி போலீசார் திட்டமிடப்பட்டுள்ளனர். இந்தநிலையில் கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் கோவை காவலர் பயிற்சி பள்ளிவளாகத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
3 பேரிடம் ரகசிய விசாரணை
கொடநாடு மேலாளரின் நண்பரும் அப்போதைய அதிமுக மாவட்ட அம்மா பேரவை துணை தலைவர் கர்சன் செல்வா, கொடநாடு கொலை கொள்ளை வழக்கின் போது மாலையாளத்தில் மொழி பெயர்த்து கொடுத்த மணிகண்டன், கோத்தகிரி பகுதியை சேர்ந்த கடைகாரர் ஜெயசீலன் ஆகியோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி யார் என்ற தகவல் வெளியாகும் என கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்
ஈரோடு இடைத்தேர்தல்..! அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு பாஜக முழு ஆதரவு- அண்ணாமலை அறிவிப்பு