சென்னையில் பயங்கரம்... தொழிலதிபர் ஓட, ஓட வெட்டிக் கொலை...!
கேளம்பாக்கம் அருகே தொழிலதிபர் ஓட, ஓட வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கேளம்பாக்கத்தை அடுத்த பொன்மார் பெரிய தெருவைச் சேர்ந்தவர் பொன்னப்பன். 48 வயதான இவர் அரிசி ஆலையும், வணிக வளாகமும் நடத்தி வருகிறார். பொன்னப்பனுக்கு திருமலை தேவி என்ற மனைவியும், மகன், மகளும் உள்ளனர்.
இரு தினங்களுக்கு முன்பு பொன்னப்பன் வேங்கடமங்கலத்தில் நடந்த உறவினர் இல்ல திருமணத்தில் பங்கேற்று விட்டு இரவு தன்னுடைய பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது நான்கு முனை சந்திப்பில் பொன்னப்பனை வழிமறித்த 2 பேர் முகவரி விசாரிப்பது போல் நடக்க, பின்னால் மறைந்திருந்த இருவர் வேகமாக வந்து அவரை வெட்ட ஆரம்பித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியான பொன்னப்பன், அங்கிருந்து தப்பியோடியுள்ளார். அவரை பின்தொடர்ந்து விரட்டிச் சென்ற கும்பல், பொன்னப்பனை தலை, முகம், முதுகு, கழுத்து ஆகிய இடங்களில் சரமாரியாக வெட்டியது. ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த பொன்னப்பன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த தாழம்பூர் போலீசார் நடத்திய விசாரணையில் பொன்னப்பனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அதன் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தொடர்ந்து போலீசார், கொலையாளிகளை தேடி வருகின்றனர்.