கடத்தல் கும்பல் தலைவனை பிடிக்க ஆந்திரா சென்ற சென்னை போலீஸ் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு.. பரபரப்பு..
கஞ்சா கடத்தல் கும்பலின் முக்கிய குற்றவாளி ஹரி பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், மதுரவாயில் உதவி ஆய்வாளர் சுதாகர் தலைமையில் 6 பேர் கொண்ட தனிப்படை போலீசார் ஆந்திரா விரைந்தனர்.
கஞ்சா கடத்தல் கும்பலின் முக்கிய குற்றவாளியை பிடிக்க ஆந்திரா சென்ற சென்னை போலீசார் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் விருகம்பாக்கம் அருகே 8 கல்லூரி மாணவர்களிடம் 18 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஆந்திராவை சேர்ந்த ஹரி என்கிற நபர் மொத்தமாக கஞ்சா வாங்கி வந்து கல்லூரி மாணவர்களிடம் கொடுத்து விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனை அடுத்து கல்லூரி மாணவர்களை கைது செய்த போலீசார், முக்கிய குற்றவாளியான ஹரியயை தேடி வந்தனர். இந்த நிலையில் ஆந்திர மாநிலம் தடா அருகே கஞ்சா கடத்தல் கும்பலின் முக்கிய குற்றவாளி ஹரி பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், மதுரவாயில் உதவி ஆய்வாளர் சுதாகர் தலைமையில் 6 பேர் கொண்ட தனிப்படை போலீசார் ஆந்திரா விரைந்தனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை ஹரியை தடா அருகே மடக்கி பிடிக்க முயற்சி செய்த போது ஹரி மற்றும் அவரது கூட்டாளிகள் சென்னை தனிப்படை போலீசார் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பி சென்றுள்ளனர். இந்த சம்பவத்தில் உதவி ஆய்வாளர் சுதாகர் மற்றும் காவலர் வள்ளிமுத்து ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்கள் பாதுகாப்பான முறையில் சென்னை திரும்பியுள்ளனர். கைது செய்ய முற்பட்ட போது போலீசார் மீது குற்றவாளிகள் நாட்டு வெடி குண்டு வீசியிருப்பது மிகுந்த அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.