தாறுமாறாக ஓடி நேருக்கு நேர் மோதிய அரசு பேருந்துகள்..! விபத்தில் சிக்கிய 45 பயணிகளின் கதி என்ன ?
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 2 அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஓட்டுநர் உயிரிழந்த நிலையில், 43 பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர்.
அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்
தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்ற அரசுப் பேருந்தும்,நாகர்கோவிலில் இருந்து குமுளி நோக்கி வந்த அரசுப் பேருந்தும் நேற்று இரவு தேனி-மதுரை எல்லைப்பகுதியான ஆண்டிபட்டி கணவாய் பகுதியில் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் நாகர்கோவிலில் இருந்து குமுளிக்கு பேருந்தை ஓட்டி வந்த கன்னியாகுமரி மாவட்டம் குருந்தம்கோடு என்னும் கிராமத்தைச் சேர்ந்த ரத்தினசாமி.த/பெ.ராஜூ என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.மேலும் ஒரு ஓட்டுனர் மற்றும் இரண்டு நடத்துனர்கள் உட்பட 43 பேர் படுகாயமடைந்தனர். அப்பகுதி வழியாக வாகனங்களில் வந்த நபர்கள் ஆண்டிபட்டி காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் விரைந்து சென்ற காவல் மற்றும் தீயணைப்புத் துறையினர் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அப்பகுதி வழியாக வந்த அரசுப் பேருந்து மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ஒருவர் பலி- 43 பேர் காயம்
சிகிச்சை பெற்று வருபவர்களில் மேலும் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. சிகிச்சை பெற்று வருபவர்களை தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் முரளிதரன் நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார். இந்த விபத்தால் மதுரை-கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 40 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.விபத்து தொடர்பாக ஆண்டிபட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் பிரேக், உள்ளிட்ட உதிரி பாகங்கள் எதுவும் சரியாக இல்லை என்று தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில் இரண்டு அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி ஓட்டுனர் உயிரிழந்த சம்பவம், இது போன்ற குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளதுடன் பெரும் சோகத்தையும், அரசு பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர்கள் மற்றும் பயணிகள் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்