கோயில்களை சீரமைத்து தருவதாக ரூ.50 லட்சம் மோசடி புகார்..! பாஜக ஆதரவாளர் கைதிற்கு அண்ணாமலை கண்டனம்
கோயில்களை சீரமைத்துத் தருவதாகக் கூறி ரூ.50 லட்சம் மோசடி செய்ததாக எழுந்த புகாரில், பா.ஜ.க ஆதரவாளரான யூ டியூபர் கார்த்திக் கோபிநாத்தை ஆவடி போலீஸார் கைது செய்தனர்.
கோயில் சிலை உடைப்பு
பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் சிலைகளை கடந்த ஆண்டு மர்ம நபர்கள் உடைக்கப்பட்டதாக புகார் கூறப்பட்டது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.சிலைகளை மாற்று மதத்தினர் தான் சேதப்படுத்தியதாக பாஜக மற்றும் இந்து அமைப்பினர் குற்றம்சாட்டியுருந்தனர். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் சிலைகளை உடைத்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இந்தநிலையில் பாஜக ஆதரவாளரும் யூ டியூபருமான கார்த்தி கோபிநாத் என்பவர் யூடியூப் மூலம் சிறுவாச்சூர் கோவிலை சீரமைக்க போவதாக கூறி நிதி வசூல் செய்துள்ளார். இது தொடர்பாக புகார்கள் எழுந்தது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களை சீரமைக்க ஒருவர் எப்படி தனிப்பட்ட முறையில் நிதி வசூல் செய்ய முடியும் என கேள்வி எழுப்பப்பட்டது. எனவே பணம் வசூலித்து கார்த்திக் கோபிநாத் மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
கார்த்தி கோபிநாத் கைது
இதனையடுத்து சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தமிழக அரசின் அறநிலையத்துறையின் அனுமதி பெறாமல் பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் உள்ள ஒரு கோயிலை சீரமைப்பதாக கூறி ரூ.50 லட்சம் அளவில் பொதுமக்களிடம் நிதி வசூலித்ததாக குற்றம்சாட்டியிருந்தார். இந்த புகாரின் பேரில் கோயில்களை சீரமைத்துத் தருவதாகக் கூறி ரூ.50 லட்சம் மோசடி செய்ததாக ஆவடி காவல்துறையினர் கார்த்தி கோபிநாத்தை இன்று கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். தேசியவாதி கார்த்திக் கோபிநாத்திற்கு தமிழக பாஜக துணை நிற்கும் என்று தெரிவித்துள்ள அவர், கார்த்திக் கோபிநாத்திற்கு தேவையான சட்ட உதவிகள் வழங்கப்படும் என அவரின் தந்தையிடம் உறுதி அளித்துள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.