ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கழுத்தறுத்து படுகொலை... குஜராத்தில் பயங்கரம்..!
குஜராத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குஜராத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குஜராத் மாநிலம் டகோட் மாவட்டம் தர்காடா மஹுடி கிராமத்தில் பரத் பலஸ் (40) தனது குடும்பத்தினருடன் வசித்துவந்தார். இவருக்கு சமிபென் (38) என்ற மனைவியும், தீபிகா (12), ஹேம்ராஜ் (10), தினேஷ் (8), ரவி (6) என 4 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், பரத் பலஸ் நேற்று இரவு தனது வீட்டில் குடும்பத்துடன் தூங்கிக்கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென அவரது வீட்டிற்குள் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த மர்ம நபர்கள் பரத், அவரது மனைவி மற்றும் அவரது 4 குழந்தைகள் என அனைவரையும் கொடூரமாக கழுத்தறுத்து கொலை செய்தனர். பின்னர், குற்றவாளிகள் அங்கிருந்து தப்பித்து சென்றுவிட்டனர். இதனையடுத்து, நீண்ட நேரமாகியும் வீடு திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்த போது குடும்பத்தினர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனே இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அனைவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.