தினமும் சாவதற்கு ஒரு முறை செத்து விடுகிறோம்... வரதட்சனை கொடுமையால் சகோதரிகள் தற்கொலை..!
எங்களின் சகோதரிகள் வரதட்சனை கேட்டு தொடர்ந்து தாக்கப்பட்டு வந்தனர். மே 25 ஆம் தேதி அவர்கள் காணாமல் போனதை அடுத்து, தேட ஆரம்பித்தோம்.
ராஜஸ்தானை சேர்ந்த சகோதரிகள் மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மூன்று சகோதரிகளும் ஒரே குடும்பத்தில் திருமணம் செய்து கொண்ட நிலையில், இரண்டு குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டனர். உயிரிழந்த குழந்தைகளில் ஒருவர் நான்கு வயதான சிறுவன் மற்றொருவர் பிறந்து 27 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை ஆகும். மேலும் தற்கொலை செய்து கொண்டு சகோதரிகளில் ஒரு பெண் கருவுற்று இருந்தார்.
தற்கொலை செய்து கொண்ட கல்லு மீனா (25 வயது), மம்தா (23 வயது) மற்றும் கமலேஷ் (20) மூவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்களை திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின் மூவரும் டுடு ஜெய்பூர் மாவட்டத்தின் சப்பியா கிராமத்தில் வசித்து வந்தனர். தற்கொலையில் உயிரிழந்த மூவரின் குடும்பத்தார் தங்களின் மருமகன்கள் வரதட்சனை கேட்டு மகள்களை தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாக குற்றம்சாட்டி உள்ளனர்.
“எங்களின் சகோதரிகள் வரதட்சனை கேட்டு தொடர்ந்து தாக்கப்பட்டு வந்தனர். மே 25 ஆம் தேதி அவர்கள் காணாமல் போனதை அடுத்து, தேட ஆரம்பித்தோம். மகளிர் உதவி எண் மூலம் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம், தேசிய பெண்கள் பாதுகாப்பு ஆணையத்தையும் இந்த விவகாரம் தொடர்பாக தொடர்பு கொண்டோம், ஆனால் குறைந்த பட்ச உதவியே கிடைத்தது,” என உயிரிழந்தவர்களின் உறவினர் ஹேமராஜ் மீனா தெரிவித்தார்.
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்:
தற்கொலை செய்து கொண்டவர்கள் அதுபற்றி எழுத்துப்பூர்வமாக எந்த கடிதமும் எழுதியதாக தெரியவில்லை. ஆனால் அவர்களின் இளம் சகோதரி கமலேஷ், “நாங்கள் இப்போது கிளம்புகிறோம், மகிழ்ச்சியாக வாழுங்கள், எங்களின் மறைவுக்கு எங்களின் மாமனார், மாமியார் தான் காரணம், தினந்தினம் இறப்பதற்கு ஒரு முறை இறப்பது சிறப்பானது.”
“இதனால் நாங்கள் ஒன்றாக இறந்து போக முடிவு செய்து விட்டோம். எங்களின் அடுத்த பிறவியில் நாங்கள் ஒன்றாக இருப்போம் என நம்புகிறோம். உயிரிழப்பதில் எங்களுக்கு விருப்பம் இல்லை, ஆனால் எங்களின் மாமனார், மாமியார் எங்களை துன்புறுத்துகின்றனர். எங்களின் உயிரிழப்புக்கு எங்களின் பெற்றோரை குற்றம்சாட்டாதீர்கள்,” என தனது வாட்ஸ்அப்-பில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார்.
மாயமாகி நான்கு நாட்கள் ஆன நிலையில் கழித்து சனிக்கிழமை காலை மூன்று சகோதரிகள், இரண்டு சிறுவர்களின் உடல்களை போலீசார் கைப்பற்றினர். இந்த தற்கொலை சம்பவத்தில் உயிரிழந்த சகோதரிகளின் கணவர்கள், மாமியார் மற்றும் மாமனார் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இவர்கள் மீது வரதட்சனை பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட இருக்கிறது.