விவேக் ஜெயராமன் வீட்டில் கொள்ளை… 100 பவுன் நகையை திருடிச் சென்றது யார் ?
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இளவரசியின் மகன் விவேக் வீட்டில் 100 பவுன் நகை திருட்டுப் போயுள்ளது.
சசிகலாவின் அண்ணன் ஜெயராமனின் மனைவி இளவரசி. இவரது மகன் விவேக் ஜெயராமன், ஜெயா தொலைக்காட்சியின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். இவர்களின் வீடு நுங்கம்பாக்கம், மகாலிங்கபுரம் ராமநாதன் தெருவில் உள்ளது.
சசிகலா, இளவரசி இருவரும் சொத்துக் குவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூரு சிறையில் உள்ளனர். தற்போது விவேக் ஜெயராமன் குடும்பத்துடன் ராமநாதன் தெருவில் வசித்து வருகிறார்.
கடந்த மாதம் சிறையிலிருந்து பரோலில் வெளிவந்த இளவரசி, பரோல் முடிந்து மீண்டும் பெங்களூரு சிறைக்கு புறப்பட்டுச் சென்றார். அவரது கார் ஓட்டுநர் முரளி பெங்களுருக்கு சென்றுவிட்டு அன்றிரவு 11.30 மணிக்கு திரும்பி இளவரசி வீட்டின் மொட்டை மாடியில் தூங்கியுள்ளார்.
மறுநாள் காலை 7 மணியளவில் ஓட்டுநர் முரளி பார்த்தபோது வீட்டின் முதல் மாடி கதவு திறந்து கிடந்துள்ளது. உள்ளே சென்று அவர் பார்த்தபோது பீரோ கதவு உடைக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து பிரசன்னா என்பவர் 750 கிராம் தங்க நகைகள் திருடு போயுள்ளதாக அளித்த புகாரின் பேரில் நுங்கம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற நாள் பிற்பகலில் வடமாநிலத்தைச் சேர்ந்த காவலாளி கோனாக் வீட்டில் காவலுக்கு இருந்துள்ளார். அதன்பின் அவரைக் காணவில்லை. இதையடுத்து அவர் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
வீட்டில் யாரும் இல்லாததை பயன்படுத்தி காவலாளி கோனாக் கள்ளச் சாவி மூலம் பீரோவை திறந்து நகையை திருடிச் சென்றிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். அங்கு தடயங்கள் சேகரிக்கப்பட்டு போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.