தமிழகத்தில், கொரோனா பரவல் அதிகரித்து வருவது தொடர்பாக, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் சீனாவின் மேற்கு மாகாணங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. ஒமைக்ரான் தொற்று பாதிப்பு அதிகரிப்பு காரணமாக சீனாவின் முக்கிய வணிக நகரமான ஷாங்காயில் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் கொரோனா புதிய அலை தாக்குமோ என்கிற அச்சம் நிலவுகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் முறையாக சீனாவின் வுகான் நகரில் கொரோனா பாதிப்பு மனிதர்களிடையே கண்டறியப்பட்டது. அதன் பிறகு, இந்த தொற்று பாதிப்பு அசூர வேகத்தில் உலக நாடுகளில் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இன்றளவும் கூட கொரோனா பாதிப்பிலிருந்து முழுமையாக மீள முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. இந்நிலையில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா பாதிப்பின் தீவிரம் குறைந்துள்ளது. 

ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சீனாவின் ஒமைக்ரான் தொற்று பரவல் வேகமெடுக்க ஆரம்பித்துள்ள நிலையில், ஒமைக்ரான் தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் அதிகரிக்க தொடங்கிய கொரோனா பாதிப்பினால், தற்போது பெருநகரங்கள் கொரோனா ஹாட்ஸ்பாட் ஆக மாறியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தற்போது பதிவாகி வரும் பாதிப்பு எண்ணிக்கை உலக அளவில் குறைவானதாக இருந்தாலும், 2019 ல் ஏற்பட்ட முதல் வார பாதிப்பை விட அதிகம் என்று கூறப்படுகிறது. 

சீனா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாக பதிவாகும் இடங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரம் ஆக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தமிழகம், தலைநகர் டெல்லி உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, கடந்த ஒரு வாரமாக அதிகரித்து வருகிறது. மேலும், ஒமைக்ரான் தொற்றின் திரிபான எக்ஸ்.இ வகை கொரோனா தொற்றும் இந்தியாவில் பரவி வருவதால், பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். 

நாடு முழுதும் கொரோனா பரவல் உயர்ந்து வருவதை அடுத்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசுகள் முடுக்கி விட்டுள்ளன. இந்நிலையில் இன்று, செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், தமிழகம் முழுவதும் முகக் கவசம் அணிவது மீண்டும் கட்டாயம் ஆக்கப்படுவதாகவும், முகக் கவசம் அணியாத நபர்களிடம் இருந்து, 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளார். 

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, அதிகரித்து வரும் கொரோனா தொற்று குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளிடம், முதலமைச்சர் மு.க ஸ்டாலின், விரைவில் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க : TN Corona : தமிழகத்தை அச்சுறுத்தும் கொரோனா.. உஷார் மக்களே ! முகக்கவசம் அவசியம்.!!