உலகில் முதன் முதலாக சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருந்த நிலையில், சீனா கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்தது.

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா :

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த வைரஸால் ஒட்டுமொத்த உலகமுமே ஊரடங்கில் இருந்தது. எண்ணிப்பார்க்க முடியாத அளவுக்கு கொரோனாவின் பாதிப்புகள் இருந்தன. ஊரடங்கால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது, கொரோனாவால் பலர் உயிரிழந்தனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு பின்னர் சீனாவின் வடகிழக்கு நகரமான சாங்சுன் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. 

சாங்சுன், ஜில்லின் மாகாணங்களில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். தொற்று அதிகரிப்பதை அடுத்து கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க சீன அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். சீனாவின் வடகிழக்கு பகுதி நகரங்களில் கொரோனா தொற்று அதிகரித்திருப்பதால் அங்கு தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. 

சீனாவின் வடகிழக்கு நகரங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 255 பேர் பலியாகியுள்ளனர். ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4,194 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச அளவாக சீனாவின் வடகிழக்கு நகரமான சாங்சுனில் தொற்று அதிகரிப்பு தீவிரமாகியுள்ளது.

லாக்டவுன் :

மிகப்பெரிய அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் தான் சீன பொருளாதார நிபுணர்கள் குழு, மீண்டும் லாக்டவுன் வந்தால் பொருளாதார நெருக்கடி அதிகரிக்கும் என எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஏறக்குறைய 90 லட்சம் மக்கள் வசித்து வரும் இந்த நகரில், வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இதையடுத்து, இந்த சாங்சுன் நகர் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளன. சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வைரஸ் எந்த மாதிரியானது, அதன் பரவும் வேகம் என்ன, எப்போதிருந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.