படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில், “விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் 01.04.2023 அன்று தொடங்கும் காலாண்டிற்கு படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனைத்துவகை மாற்றுத்திறனாளி இளைஞர்களிடமிருந்து வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தோல்வி, அதற்கும் மேலான கல்வித்தகுதிகளை பெற்றவர்கள், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பதிவை தொடர்ந்து புதுப்பித்து 31. 3. 2023 அன்றைய தேதியில் 5 ஆண்டுகள் நிறைவடைந்த பின்னர் வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவடைந்த பின்னர் வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கும் தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரர்கள் 31. 3. 2023 அன்றைய நிலையில் 45 வயதுக்குள்ளும், இதர இனத்தை சார்ந்தவர்கள் 40 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும். இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகையை இருமடங்காக உயர்த்தி மாதம் ஒன்றுக்கு 10-ம் வகுப்பு தோல்விக்கு ரூ. 200-ம், தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 300-ம், மேல்நிலைக்கல்விக்கு ரூ. 400, பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு ரூ. 600, மாற்றுத்திறனாளிகளுக்கு 10-ம் வகுப்பு தோல்வி மற்றும் தேர்ச்சிக்கு ரூ. 600, மேல்நிலைக்கல்வி தேர்ச்சிக்கு ரூ. 750-ம், பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு ரூ. 1, 000 என்றவாறு வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.

உதவித்தொகை விண்ணப்ப படிவம் பெற விரும்பும் மனுதாரர்கள், தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையை ஆதாரமாக காண்பித்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் விண்ணப்பங்களை அனைத்து அலுவலக வேலைநாட்களிலும் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். அல்லது employmentexchange. tn. gov. in என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 

இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே பயன்பெற்றவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் ஆவர். அதுபோல் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுபவர்களின் பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. மேலும் உதவித்தொகை விண்ணப்பங்களை மனுதாரர்கள், வருகிற மே மாதம் 31-ந் தேதி வரை அனைத்து அலுவலக வேலைநாட்களிலும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் இயங்கும் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டப்பிரிவில் அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை, தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்துடன் நேரில் சமர்பிக்கலாம்” என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மாதம் 50 ஆயிரம் சம்பளத்தில் காத்திருக்கும் வேலை.. 8ம் வகுப்பு படித்தால் போதும் - முழு விபரம்