தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) CTSE (டிப்ளோமா / ITI நிலை) 2025 தேர்வுக்கான காலிப்பணியிடங்களை 2100 ஆக அதிகரித்துள்ளது. கட்-ஆஃப் மதிப்பெண்கள் விரைவில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு வேலை காத்திருக்கு மக்களே
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் நடத்தப்படும் Combined Technical Services Examination (CTSE) – டிப்ளோமா / ITI நிலை 2025 தேர்வுக்கான திருத்தப்பட்ட காலிப்பணியிட அறிவிப்பு 12.12.2025 அன்று அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது. முதலில் 13.06.2025 அன்று வெளியான அறிவிப்பில் 1910 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கூடுதல் அறிவிப்பின் மூலம் மேலும் 190 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மொத்தமாக 2100 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக TNPSC தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வு எழுதியுள்ள டிப்ளோமா மற்றும் ITI தகுதி பெற்ற இளைஞர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதெல்லாம் கட்டாயம் தெரிஞ்சுக்கனும்
CTSE (Diploma / ITI Level) தேர்வு, தமிழ்நாடு அரசு துறைகளில் தொழில்நுட்ப பணிகளுக்கான நியமனங்களை மேற்கொள்ளும் முக்கியமான தேர்வாகும். இந்தத் தேர்வில் எழுத்துத் தேர்வு மற்றும் அதனைத் தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு என்ற இரண்டு கட்ட தேர்வு முறைகள் நடைமுறையில் உள்ளன. 2025 ஆம் ஆண்டுக்கான இந்தத் தேர்வில் Paper–I தேர்வு 31.08.2025 அன்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து Paper–II தேர்வு 07.09.2025 முதல் 27.09.2025 வரை பல்வேறு தேதிகளில் நடத்தப்பட்டது. தற்போது தேர்வு செயல்முறைகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில், தேர்வர்களின் கவனம் முடிவுகள் மற்றும் கட்-ஆஃப் மதிப்பெண்கள் வெளியீட்டில் உள்ளது.
இளைஞர்களுக்கு நம்பிக்கை தரும் முக்கிய செய்தி
TNPSC CTSE (Diploma / ITI Level) 2025 தேர்வின் முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என ஆணையம் அறிவித்துள்ளது. தேர்வர்கள் தங்கள் முடிவுகளை TNPSC-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு எண் மற்றும் உள்நுழைவு விவரங்களை பயன்படுத்தி பார்க்கலாம். முடிவுகள் வெளியானதும், தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள். எனவே, தேர்வர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தை அடிக்கடி பார்வையிட்டு, புதிய அறிவிப்புகள் மற்றும் அப்டேட்ஸ்களை கவனித்து வருவது அவசியமாகும். இந்த திருத்தப்பட்ட காலிப்பணியிட அறிவிப்பு, அரசு வேலை கனவுடன் காத்திருக்கும் பல ஆயிரம் இளைஞர்களுக்கு நம்பிக்கை தரும் முக்கிய செய்தியாக பார்க்கப்படுகிறது.


