TNEA கலந்தாய்வைத் தவறவிட்டீர்களா? துணை பொறியியல் கலந்தாய்வு 2025-க்கு விண்ணப்பிக்கலாம்! பதிவு திறப்பு, ஆகஸ்ட் 21 சாய்ஸ் ஃபில்லிங்.
தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கவில்லையா? அல்லது முதல் கலந்தாய்வில் பங்கேற்கவில்லையா? கவலை வேண்டாம்! உங்களுக்கு இன்னும் ஒரு அரிய வாய்ப்பு காத்திருக்கிறது. 12 ஆம் வகுப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பொதுக் கலந்தாய்வில் கலந்துகொள்ள முடியாதவர்களுக்காக பொறியியல் துணை கலந்தாய்வு (TNEA Supplementary Counselling 2025) தொடங்கப்பட்டுள்ளது. இந்த துணை கலந்தாய்வில் பங்கேற்று இந்த ஆண்டே கல்லூரியில் சேரலாம்.
தமிழ்நாட்டில் 2 லட்சத்திற்கும் அதிகமான பொறியியல் இடங்கள்!
தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகம் உட்பட அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள அனைத்து பொறியியல் இடங்களும் தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் மூலம் கலந்தாய்வின் அடிப்படையில் நிரப்பப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள பொறியியல் இடங்கள், அதன் 16 உறுப்புக் கல்லூரிகளில் உள்ள இடங்கள், அண்ணாமலை பல்கலைக்கழக இடங்கள், 11 அரசு பொறியியல் கல்லூரிகள், சுமார் 460 அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள் என தமிழ்நாட்டில் 2 லட்சத்திற்கும் அதிகமான பொறியியல் இடங்கள் உள்ளன.
நடந்து முடிந்த பொதுக் கலந்தாய்வு சுற்றுகள்!
2025-26 கல்வி ஆண்டில் பொறியியல் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு மே மாதமே தொடங்கி, ஜூன் முதல் வாரம் நிறைவடைந்தது. விண்ணப்பித்த மாணவர்களுக்கு ரேண்டம் எண் ஒதுக்கப்பட்டு, 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் ஜூன் 27 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு 3.02 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 2,41,641 பேர் கலந்தாய்வுக்குத் தகுதி பெற்றனர்.
சிறப்புப் பிரிவினருக்கான (முன்னாள் ராணுவத்தினர் வாரிசு, மாற்றுத்திறனாளிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் 7.5% இட ஒதுக்கீடு) கலந்தாய்வு ஜூலை 9 முதல் 11 வரை நடைபெற்றது. பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 14 முதல் தொடங்கியது. இந்தப் பிரிவினருக்கு மொத்தம் 3 சுற்றுகளில் கலந்தாய்வு நடத்தப்பட்டது. முதல் சுற்று ஜூலை 14 முதல் 27 வரையும், இரண்டாம் சுற்று ஜூலை 26 முதல் தொடங்கி ஆகஸ்ட் 4 வரை கல்லூரிகளில் சேர அவகாசம் வழங்கப்பட்டது. மூன்றாம் சுற்று ஆகஸ்ட் 7 முதல் 17 வரை நடைபெற உள்ளது.
துணை கலந்தாய்வு: ஆகஸ்ட் 21 முதல் சாய்ஸ் ஃபில்லிங்!
பொதுக் கலந்தாய்வில் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள், கலந்துகொள்ள இயலாதவர்கள் மற்றும் 12 ஆம் வகுப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பாக துணை கலந்தாய்வு திட்டமிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 21 முதல் 23 வரை துணை கலந்தாய்வு நடைபெறும். இதில் கலந்துகொள்ள விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் வழியாகப் பதிவு செய்ய வேண்டும். மூன்று சுற்றுகளின் இறுதியில் நிரப்பப்படாமல் இருக்கும் இடங்கள் இந்தக் கலந்தாய்வில் நிரப்பப்படும். சாய்ஸ் ஃபில்லிங் செய்வதற்கு முன், எத்தனை இடங்கள் உள்ளன, எந்தக் கல்லூரி மற்றும் என்ன படிப்பு என்பதைச் சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.
துணை கலந்தாய்விற்குப் பதிவு செய்வது எப்படி?
பொறியியல் துணை கலந்தாய்வில் கலந்துகொள்ள விரும்பும் மாணவர்கள் https://suppl.tneaonline.org/ மற்றும் https://www.tneaonline.org/ என்ற இணையதளங்களில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி முதல் ஆன்லைன் வழியாகப் பதிவு செய்யலாம். பதிவு செய்யும் மாணவர்கள் தங்களுக்கான தனி மின்னஞ்சல் ஐடி, மொபைல் எண் வைத்துக்கொள்வது சிறந்தது. மதிப்பெண் சான்றிதழ்கள், வகுப்புப் பிரிவு சான்றிதழ், வருமானச் சான்றிதழ், முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ், சிறப்புத் தேவை இருந்தால் அதற்கான சான்றிதழ், ஆதார் எண், EMIS எண் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். ஆன்லைன் வழியாக எப்படிப் பதிவு செய்வது உள்ளிட்ட விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.
ஆன்லைன் வழியாகப் பதிவு செய்ய இயலாதவர்கள், தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் மாநிலம் முழுவதும் ஏற்பாடு செய்துள்ள பொறியியல் சேர்க்கை சேவை மையங்களில் நேரில் சென்று அணுகலாம். அங்கு மாணவர்களின் தேவைக்கான அனைத்து தகவல்களும் வழங்கப்படும். சேவை மையங்களின் பட்டியலை TNEA இணையதளத்தில் காணலாம்.


