ஆட்டோ டெபிட் மூலம் இஎம்ஐ, மாதக் கட்டணங்கள் செலுத்தி வரீங்களா..? நாளை முதல் அதிரடியாக மாறும் விதிமுறைகள்!
வங்கிக் கணக்குகள், டெபிட், கிரெடிட் கார்டு கணக்குகளிலிருந்து வங்கிகள் மாதத் தவணைகள், மாதக் கட்டணங்களைத் தானாகவே எடுக்க புதிய விதிமுறைகள் நாளை முதல் அமல் ஆகின்றன.
வங்கிகள் மூலம் மாதக் கட்டணங்கள், தவணை தொகைகள் எனப் பலவும் ஆட்டோ டெபிட் மூலம், நம்முடைய கணக்கிலிருந்து குறிப்பிட்ட தேதியில் எடுத்துக்கொள்ளும் நடைமுறை தற்போது உள்ளது. மேலும் பல சேவைகளைப் பெற கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலமும் ஆட்டோ டெபிட் வாயிலாக செலுத்தி வருகிறோம். இந்த முறையில் புதிய மாற்றங்கள் அக்டோபர் 1 முதல் மேற்கொள்ளப்பட உள்ளன. ரிசர்வ் வங்கியின் உத்தரவுப்படி எல்லா வங்கிகளும் இந்த மாறுதல்களை மேற்கொள்ள உள்ளன.
இதனையத்து வங்கிக் கணக்கு வைத்திருப்போர், டெபிட், கிரெடிட் கார்டுகள் பயன்படுத்துவோருக்கு வங்கிகள் இதுதொடர்பான தகவல்களை அனுப்பி வருகின்றன. புதிய விதிமுறைப்படி, நமக்கு சேவையையோ, பொருளையோ கடனையோ வழங்கும் நிறுவனங்கள், குறிப்பிட்ட தேதியில், நம் வங்கி கணக்கிலிருந்து தொகையைத் தானாக ஆட்டோ டெபிட் மூலம் எடுக்கும் நிலையில், இனி வாடிக்கையாளருக்கு தெரிவிக்காமல் வங்கிகளால் பணம் எடுக்க முடியாது. குறைந்தபட்சம் பணம் எடுக்க 24 மணி நேரத்துக்கு முன்பாக வாடிக்கையாளர்களுக்கு அது குறித்த தகவல்களை வங்கிகள் தெரிவிக்க வேண்டும்.
அதற்கு வாடிக்கையாளர்கள் அனுமதி வழங்கினால்தான் பணத்தையே நம் வங்கிக் கணக்கிலிருந்தோ அல்லது கிரெடிட் கார்டு கணக்கிலிருந்தோ எடுக்க முடியும். மேலும் செலுத்தப்படும் பணம் ரூ. 5,000 மே இருந்தால், ஒரு முறை வழங்கப்படும் ஓடிபி மூலம் ஒப்புதல் பெறப்பட்ட பிறகே வங்கிகள் பணத்தை எடுக்க முடியும். கடந்த ஏப்ரல் 1 முதலே இந்த முறை அமலுக்கு வர இருந்தது. ஆனால், வங்கிகள் இந்த மாற்றத்தைச் செயல்படுத்த ஆறு மாதங்கள் அவகாசம் கேட்டன. அந்த அவகாசம் முடிந்த நிலையில் நாளை முதல் புதிய விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன.