தமிழ்நாடு அரசு தொழில் தொடங்க 40 சதவீதம் மானியத்துடன் ரூ.1.5 கோடி கடன் வழங்குகிறது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
Tamil Nadu Govement provides loans For Starting Business: தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அரசு சார்பில் ரூ.1.5 கோடி கடன் வழங்கப்பட உள்ளது. இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம்(TIIC) மாநில அளவில் செயல்பட்டு வரும் ஒரு மாநில நிதிக் கழகம் ஆகும். 1949-ஆம் ஆண்டு துவங்கப் பெற்ற இக்கழகம் மாநில அரசின் ஆதரவுடன் இதுவரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கி தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்கிறது.
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம்
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம்(TIIC) குறு, சிறு மற்றும் நடுத்தர (MSME) தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கு, தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனங்களை விரிவுபடுத்துவதற்கு, உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கு பல்வேறு சிறப்புத் திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது. மேலும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் கடனுதவிக்கு அப்பாற்பட்ட சேவைகளையும் (Lending Plus Service Provide to MSME) செய்து வருகிறது. தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், திண்டுக்கல் கிளை அலுவலகம் "பிளாட் எண்.2, பாண்டியன் நகர், முதல் தெரு, காட்டாஸ்பத்திரி அருகில், திண்டுக்கல் - 624 001" என்ற முகவரியில் இயங்கி வருகிறது.
சிறப்பு தொழில் கடன் முகாம்
திண்டுக்கல் கிளை அலுவலகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் 02.06.2025 முதல் 30.06.2025 வரை நடைபெறுகிறது. மாநில அளவில் நடப்பு நிதியாண்டின் கடன் இலக்காக ரூ.2117 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களுக்கு மட்டும் கடன் இலக்காக ரூ.92.00 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடன் திட்டங்களின் சிறப்பு அம்சங்கள்
இச்சிறப்பு தொழில் கடன் முகாமில் டி.ஐ.ஐ.சி.(TIIC)யின் பல்வேறு கடன் திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய, மாநில அரசுகளின் மானியங்கள் (மூலதன மானியம், வட்டி மானியம் மற்றும் இதர மானியங்கள்), புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம்(NEEDS) மற்றும் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்(AABCS). கலைஞர் பசுமை ஆற்றல் திட்டம் (Kalaingar Green Energy Scheme) போன்றவை குறித்து விரிவான விளக்கங்கள் அளிக்கப்படவுள்ளது.
ரூ.1.5 கோடி வரை கடன் வழங்கப்படும்
தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீதம் முதலீட்டு மானியம் அதிகபட்சமாக ரூ.150 இலட்சம் வரை வழங்கப்படும். மேலும் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் திட்டத்தின் கீழ் எஸ், எஸ்.டி.(SC/ST) தொழில் முனைவோருக்கு திட்ட மதிப்பில் 35 சதவீதம் முதலீட்டு மானியம் மற்றும் 6 சதவீதம் வட்டி மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு...
இந்த முகாம் காலத்தில் சமர்ப்பிக்கப்படும் பொதுக் கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணம் செலுத்துவதில் முழு விலக்கு அளிக்கப்படும். இந்த அரிய வாய்ப்பினை திண்டுக்கல் மாவட்ட தொழில் முனைவோர்கள் பயன்படுத்தி தங்களது தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் மத்திய மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களை 9962622939, 9445023477 ஆகியற கைபேசி எண்களில் சம்பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம்" என கூறியுள்ளார்.
