இந்திய பங்குச் சந்தையில் சென்செக்ஸ் இன்று தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால், முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்திய பங்குச் சந்தை கடந்த சில நாட்களாகவே முதலீட்டாளர்களுக்கு சாதகமாக இருந்து வருகிறது. சென்செக்ஸ் இன்று 612.55 புள்ளிகள் அதிகரித்து 66,008.23 புள்ளிகளை தொட்டுள்ளது. துவக்கத்தில் 500 புள்ளிகளுக்கும் மேல் அதிகரித்து காணப்பட்டது. அதாவது, துவக்கத்தில் 0.81 சதவீத வளர்ச்சியை பெற்று இருந்தது. அதே நேரம் 50 பங்குகளை கொண்ட நிஃப்டி 150 புள்ளிகள் அதிகரித்து 19,534, புள்ளிகளை தொட்டுள்ளது. அதாவது 0.78 சதவீத வளர்ச்சியை பெற்று இருந்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பங்குச் சந்தை உயர்வுக்கு அமெரிக்காவின் பணவீக்கம் குறைந்து இருப்பதுதான் காரணமாக கூறப்படுகிறது. கடந்த 2021ஆம் ஆண்டுக்குப் பின்னர் கடந்த ஜூன் மாதம் பணவீக்கம் சுமார் 3% குறைந்து இருக்கிறது. இது சர்வதேச அளவில் பிரதிபலித்து இந்திய பங்குச் சந்தையிலும் எதிரொலித்துள்ளது.

டாடா ஸ்டீல், ஹெச்டிஎஃப்சி வங்கி, டிசிஎஸ், எம்&எம், எஸ்பிஐ மற்றும் ரிலையன்ஸ் ஆகியவை சென்செக்ஸில் இன்று லாபம் ஈட்டியுள்ளன. பஜாஜ் ஆட்டோ, ஹிண்டல்கோ மற்றும் எச்டிஎஃப்சி லைஃப் ஆகியவை நிஃப்டியில் ஆதாயத்தை ஈட்டியுள்ளன. மறுபுறம், ஹெச்சிஎல் டெக், பவர் கிரிட், நெஸ்லே மற்றும் டாக்டர் ரெட்டிஸ் ஆகியவை பின்னடவை சந்தித்துள்ளன.

மும்பை பங்குச் சந்தையில் மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் 0.6 சதவீதம் வரை உயர்ந்து இருந்தன. ஒட்டு மொத்தமாக அனைத்து வகையிலான சந்தைகளும் இன்று ஏற்றம் கண்டு இருந்தன.

மேலும், ஹெச்சிஎல் டெக் பங்குகள் சரிவில் இருந்தபோதும், ஐடி குறியீட்டு எண் ஒரு சதவீதத்திற்கும் அதிகமாக ஆரம்ப வர்த்தகத்தில் வர்த்தகத்தில் உயர்ந்து காணப்பட்டது.