share market today : கடந்த இரு நாட்களாக உயர்வுடன் வர்த்தகத்தை நடத்தி வந்த மும்பை, தேசியப்பங்குச் சந்தை இன்று சரிவுடன் தொடங்கியுள்ளது. 

கடந்த இரு நாட்களாக உயர்வுடன் வர்த்தகத்தை நடத்தி வந்த மும்பை, தேசியப்பங்குச் சந்தை இன்று சரிவுடன் தொடங்கியுள்ளது. சர்வதேச காரணிகள், சீன லாக்டவுன், ரஷ்யா உக்ரைன் போர், அமெரிக்க பெடரல் வங்கி நடவடிக்கை ஆகியவை முதலீட்டாளர்களை அச்சமடையச் செய்துள்ளது.

பெடரல் வங்கி

அமெரிக்காவில் நிலவும் வரலாறு காணாத பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மே மாதத்தில் வட்டிவீதம் உயர்த்தப்படும் என பெடரல் வங்கி அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அந்நிய முதலீட்டாளர்கள், உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உள்நாட்டு காலாண்டு முடிவுகள் சாதகமாக நேற்று இருந்ததால் இதை நேற்று கருதவில்லை, ஆனால், மே மாதம் நெருங்கும்போது முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய தயங்குகிறார்கள்.

சீனா கொரோனா

சீனால் கொரோனா பரவல் குறையாமல் இருந்து வருகிறது. பல்வேறு நகரங்கள் இன்னும் லாக்டவுன் பிடியில்தான் இருக்கின்றன. இதனால் பொருட்கள் சப்ளை உலகளவில் பாதிக்கப்படலாம், பொருளாதார வளர்ச்சி குறையலாம் என்று முதலீட்டாளர்கள் அச்சப்படுகிறார்கள்

உக்ரைன் மீதான பிடியை இறுக்கி வரும் ரஷ்யா, போலந்து, பல்கேரியா நாடுகளுக்கு இயற்கைஎரிவாயு அனுப்ப ரஷ்யா மறுத்துவிட்டது. அந்த நாடுகள் ரூபிளில் பணம் செலுத்த மறுத்ததால் ரஷ்யா நடவடிக்கை எடுத்துள்ளது.

அமெரிக்கப் பங்குசந்தையில் ஏற்பட்ட சரிவு ஆசியப் பங்குச்சந்தையிலும்எதிரொலித்து வருகிறது. ஹாங்காங், ஜப்பானின் நிக்கி ஆகியவை சரிவுடன் முடிந்தன. இதன் பாதிப்பு இந்தியப் பங்குச்சந்தையிலும்இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது இருந்தது.

வர்ததகம் சரிவு

இன்று காலை மும்பைப் பங்குச்சந்தையில் வர்த்தகம் தொடங்கும் முன்பே, சென்செக்ஸ் 300 புள்ளிகள் சரிந்தது. அதன்பின் வர்த்தகம் தொடங்கியபின், மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 430 புள்ளிகள் சரிந்து, 59,926 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 116 புள்ளிகள் குறைந்து, 17,084 புள்ளிகளுடன் வர்த்தகத்தை நடத்தி வருகிறது. 772 பங்குகள் மதிப்பு உயர்ந்துள்ளு, 1203 பங்குகள் மதிப்பு குறைந்துள்ளது, 114 பங்குகள் மதிப்பு நிலையாக இருக்கிறது

லாபமான பங்குகள்

30 முக்கியப் பங்குகளைக் கொண்ட மும்பைப் பங்குச்சந்தையில் என்டிசிபி, பவர்கிரிட், சன்ஃபார்மா, இந்துஸ்தான் யூனிலீவர் , டாடா ஸ்டீல், ஹின்டால்கோ, அதானி போர்ட்ஸ், ஆகிய நிறுவனப்பங்குகள் மட்டுமே லாபத்தில் நகர்கின்றன. மற்ற 26 நிறுவனப் பங்குகளும் சரிவில் உள்ளன. குறிப்பாக லார்சன் அன்ட்டூப்ரோ, அல்ட்ராடெக் சிமெண்ட், பஜாஜ் ட்வின்ஸ், மாருதி, மகிந்திரா அன்ட் மகிந்திரா, ஆக்சிஸ் வங்கி, இன்போசிஸ், ஐடிசி, விப்ரோ ஆகிய நிறுவனப் பங்குகள் 4 சதவீதம் வரை சரிந்துள்ளன.

நிப்டியில் ஊடகத்துறை, உலோகத்துறை பங்குகள் மட்டுமே லாபத்தில் உள்ளன. மற்ற துறைகளான தகவல்தொழில்நுட்பம், வங்கி, ஆட்டமொபைல் பங்குகள் ஒரு சதவீதம் சரிவில் உள்ளன. 

நிப்டியில் அதானி போர்ட்ஸ், ஓஎன்ஜிசி, ஹெட்சிஎப்சி லைப், அப்பலோ மருத்துவமனை, சன் ஃபார்மா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் லாபத்தோடு நகர்கின்றன. பஜாஜ் பைனான்ஸ், லார்சன் அன்ட் டூப்ரோ, கிராஸிம் இன்டஸ்ட்ரீஸ் பங்குகள் சரிவில் உள்ளன