SBI server down: நாடு முழுவதும் எஸ்பிஐ வங்கி சர்வர் முடங்கின; பணம் எடுக்க முடியாமல் வாடிக்கையாளர்கள் திணறல்!!
நாடு முழுவதும் எஸ்பிஐ வங்கியின் சர்வர் இன்று காலை முதல் முடங்கி இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
நாட்டிலேயே பெரிய வங்கி சேவையாக இருக்கும் எஸ்பிஐ வங்கியின் நெட் வங்கி, யுபிஐ, யோனோ ஆப் ஆகியவற்றின் சர்வர்கள் முடங்கி இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனால் வங்கிகளில் தங்களால் பணத்தை செலுத்த முடியவில்லை, எடுக்க முடியவில்லை என்று பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து டவுன்டிடெக்டர் என்ற டிரேக்கர் வெளியிட்டு இருக்கும் தகவலில், ''இன்று காலை 9.19 மணி முதல் எஸ்பிஐ சர்வர் செயல்படவில்லை என்று தெரிவித்துள்ளது. மேலும், இதேபோன்ற பிரச்சனை நேற்றும் வங்கி சர்வரில் இருந்ததாக கூறப்பட்டு இருக்கிறது.
இதற்கு பதிலளித்து இருக்கும் எஸ்பிஐ வங்கி, ''நிதியாண்டின் இறுதி கணக்குகள் எடுக்கப்பட்டு வருவதால், சர்வர் டவுன் ஆகியுள்ளது. வாடிக்கையாளர்களின் கவலை புரிகிறது. ஆண்டு இறுதி கணக்குப் பணிகள் முடிந்த பின்னர் இன்று மாலை 4.30 மணிக்கு ஐஎன்பி/யோனோ/யோனோ லைப்/ யோனோ பிசினஸ்/ யுபிஐ ஆகியவை செயல்படத் துவங்கும். வாடிக்கையாளர்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்'' என்று தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர்கள் தங்களது புகாரில், ''@FinMinIndia @RBI, மார்ச் 31ஆம் தேதியில் இருந்து எஸ்பிஐ வங்கி சர்வர்கள் சரியாக செயல்படவில்லை. இன்று நான்காவது நாளாக காலை முதல் சைட்/ஆப் அனைத்தும் டவுன் ஆகி இருக்கிறது. இது வழக்கமான சைபர் அட்டாக்கா அல்லது எப்போதும் போல அச்சிதினா? எங்களுக்கு பதில் வேண்டும், வாடிக்கையாளர்களுக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது'' என்று ஒரு வாடிக்கையாளர் பதிவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.