100 நாட்கள் வேலைத் திட்ட தொழிலாளர்களுக்கு ரூ.3,360 கோடி கூலி நிலுவை: நாடாளுமன்றத்தில் தகவல்
100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டம் எனச் சொல்லப்படும், மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு ரூ. 3 ஆயிரத்து 360 கோடி கூலி நிலுவை இருப்பதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டம் எனச் சொல்லப்படும், மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு ரூ. 3 ஆயிரத்து 360 கோடி கூலி நிலுவை இருப்பதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இதில் மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம்,ராஜஸ்தான் மாநிலங்களில் அதிக அளவு கூலி நிலுவை இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு தாக்கல் செய்த 2022-23ம் ஆண்டு பட்ஜெட்டில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கான நிதி, நடப்பு நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட அளவோடு ஒப்பிடுகையில் 25 % குறைக்கப்பட்ட நிலையில் கூலி நிலுவையும் இருக்கிறது. இந்த கூலி நிலுவை இருப்பதால், அடுத்த நிதியாண்டிலும் எடுத்துச் செல்லப்படும்போது, வேலைசெய்யும் மக்களுக்கு நாட்களும், கூலி வழங்குவதும் பாதிக்கப்படக்கூடும்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. ஜான் பிரிட்டாஸ் எழுப்பிய கேள்விக்கு மத்திய கிராமப்புற மேம்பாட்டுத்துறை இணைஅமைச்சர் சாத்வி நிரஞ்சன் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். மாநில வாரியாக 100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டம் வழங்கிய நாட்கள் எண்ணிக்கை, கூலியின் நிலுவைத் தொகை குறித்து நாடாளுமன்றத்தில் சாத்வி தெரிவித்தார்.
அவர் கூறுகையில் “ 2022, ஜனவரி 27ம் தேதி நிலவரப்படி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு ரூ.3,358.14 கோடி கூலி நிலுவை இருக்கிறது. இதில் அதிகபட்சமாக மே.வங்கத்தைச் சேர்ந்த மக்களுக்கு ரூ.752 கோடி கூலி நிலுவையும், அதைத்தொடர்ந்து உத்தரப்பிரதேசத்துக்கு ரூ.597கோடியும், ராஜஸ்தானுக்கு ரூ.555 கோடியும் கூலி நிலுவை இருக்கிறது. தளவாடங்கள் வாங்கியதற்கான தொகை ரூ.11,027 கோடி நிலுவையில் இருக்கிறது” எனத் தெரிவித்தார்
100 நாட்கள் வேலைதிட்டத்தின் ஊழியர்கள் கூட்டமைப்பு கூறுகையில் “ 2022-23ம் ஆண்டு பட்ஜெட்டில் 100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகை நடப்பு நிதியாண்டில் ஒதுக்கிய தொகையைவிட 25% குறைவாகும். அனைத்து நிலுவைகளையும் வழங்கினால், அடுத்த ஆண்டு 100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு மொத்தம் ரூ.54,560 கோடி மட்டும்தான் இருக்கும்.
ஒவ்வொரு ஆண்டும், இந்த திட்டத்துக்காக ஒதுக்கப்படும் தொகையில் 80 முதல் 90% தொகை முதல் 6 மாதங்களிலேயே தீர்ந்துவிடும். இதனால்தான் 100நாட்கள் வேலைத்திட்டம் மிகவும் மெதுவாக நடக்கிறது. 100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டம் வைத்திருக்கும் மக்கள் அனைவருக்கும் முழுமையாக வேலைவழங்க முடியாததற்கு போதிய நிதி ஒதுக்கீடும் இல்லாதது காரணமாகும்.
இந்த திட்டத்தில் ஒரு நபருக்கு தினசரி ரூ.334 கூலி தரப்படுகிறது. பட்ஜெட்டில் ஒதுக்கிய தொகையின் மூலம் இந்த திட்டத்தில் உறுப்பினர் அட்டை வைத்திருப்பவர்களுக்கு 100 நாட்களில் வெறும் 16 நாட்கள் மட்டுமே வேலைவழங்க முடியும்” எனத் தெரிவித்துள்ளது