இளைஞர்களை குறிவைத்து புது ஸ்கெட்ச் போடும் ராயல் என்ஃபீல்டு
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்தியாவில் மோட்டார்சைக்கிள் ரேசிங் பயிற்றுவிக்க பயிற்சி மையங்களை திறக்க இருக்கிறது.
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் நாடு முழுக்க பயிற்சி மையங்களை திறக்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் ரேசிங் துறையில் ஆர்வம் மிக்க இளைஞர்களை ஊக்குவிக்கவும், அவர்களுக்கு தேவையான அடிப்படை பயிற்சிகளை வழங்க ராயல் என்ஃபீல்டு முடிவு செய்துள்ளது. சமீபத்தில் ராயல் என்ஃபீல்டு காண்டினெண்டல் ஜி.டி. கோப்பை 2021 நிகழ்வு நிறைவுற்றதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
முதல்முறையாக நடைபெற்ற ராயல் என்ஃபீல்டு காண்டினெண்டல் ஜி.டி. கோப்பை போட்டியில் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 18 ரைடர்கள் பங்கேற்றனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் துவங்கிய இந்த போட்டி நான்கு கட்டங்களாக நடைபெற்றது. இந்த போட்டியில் பிரத்யேகமாக மாடிஃபை செய்யப்பட்ட ராயல் என்ஃபீல்டு காண்டினெண்டல் ஜி.டி. ஆர்650 பயன்படுத்தப்படுகிறது.
மாடிஃபை செய்யப்பட்ட ராயல் என்ஃபீல்டு காண்டினெண்டல் ஜி.டி. 650 மாடலில் ரெட்ரோ ஃபேரிங், உறுதியான சஸ்பென்ஷன், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் எக்சாஸ்ட்கள் மற்றும் சவுகரியமான ரைடிங் போஸ்ட்யூர் வழங்கப்பட்டு இருக்கிறது. முதற்கட்ட பந்தயத்தில் கிட்டத்தட்ட 500 ரேசிங் பிரியர்கள் கலந்து கொண்டனர். தேர்வு முறையில் நூற்றுக்கும் அதிகமான ரைடர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் இருந்து 18 அதிவேக ரைடர்கள் இறுதி சுற்றுக்கு முன்னேறின.
ராயல் என்ஃபீல்டு காண்டினெண்டல் ஜி.டி.650 கோப்பை 2021 போட்டியின் ஒட்டுமொத்த தேசிய சாம்பியனாக ஹூப்ளியை சேர்ந்த அனிஷ் தாமோதர் ஷெட்டி வெற்றி பெற்றார். நான்கு கட்டங்களில் பங்கேற்ற அனிஷ் ஒட்டுமொத்தமாக 64 புள்ளிகளை பெற்று அசத்தினார். இவரைத் தொடர்ந்து ஆல்வின் சேவியர் மற்றும் ஆன்ஃபல் அக்தர் முறையே 61 மற்றும் 40 புள்ளிகளை பெற்றனர்.