qr code scanner: நீரிழிவு, ரத்தஅழுத்தம் உள்ளிட்ட டாப் 300 மருந்துகளுக்கு QR கோட்: மத்திய அரசு உத்தரவு
qr code scanner:மருந்துகளின் நம்பகத்தன்மை மற்றும் கண்டுபிடிப்புத்தன்மையை உறுதி செய்ய, வலி நிவாரணி, வைட்டமின்கள், நீரிழிவு, உயர்ரத்தக்கொதிப்பு உள்ளிட்ட நோய்களுக்கான 300 விதமான மருந்துகளுக்கு க்யூஆர்(QR) கோடி இடம் பெற வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
மருந்துகளின் நம்பகத்தன்மை மற்றும் கண்டுபிடிப்புத்தன்மையை உறுதி செய்ய, வலி நிவாரணி, வைட்டமின்கள், நீரிழிவு, உயர்ரத்தக்கொதிப்பு உள்ளிட்ட நோய்களுக்கான 300 விதமான மருந்துகளுக்கு க்யூஆர்(QR) கோடி இடம் பெற வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
1945ம்ஆண்டு மருந்துச் சட்டத்தில் சமீபத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் திருத்தங்கள் செய்தது. கடந்த மார்ச் மாதம், மத்திய மருந்துத்துறையிடம், க்யூஆர் கோட் இடம் பெற வேண்டிய 300 வகையான மருந்துகள் பட்டியலைத் தயார் செய்யக் கோரி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டது.
இதன்படி தேசிய மருந்து விலை ஆணையம்(என்பிபிஏ) 300 வகையான மருந்துகளை அடையாளம் கண்டுள்ளது. இந்த மருந்துகள் மக்கள் பரவலாகப் பயன்படுத்தக்கூடிய வலிநிவாரணி, கருத்தடைகள், வைட்மின்கள், ரத்தச்சர்க்கரை மற்றும் உயர்ரத்த அழுத்த மாத்திரைகளாகும்.
அதிலும் குறிப்பாக டோலோ, அலிக்ரா, அஸ்தானில், அகுமென்டின், சாரிடான், லிம்சி, கால்பால், கோரெக்ஸ், தைரோநார்ம் ஆகிய பிரபலமான பிராண்டுகளும், 72 வேறுவகை மருந்துகளும் அடங்கும்.
இது தொடர்பாக கடந்த 14ம் தேதி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வரைவு அறிக்கையும் வெளியி்ட்டுள்ளது. மருந்து நிறுவனங்கள் மாத்திரைகள் மற்றும் மருந்துகளின் வெளிப்புற பேக்கிங் மற்றும் மருந்துகளிலும் க்யூஆர் கோட் பதிவிட வேண்டும். அதுமட்டுமல்லாமல் தேவையான விவரங்களையும் சேகரித்து, அவ்வப்போது அப்டேட் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த க்யூஆர் கோட் மற்றும் சேமிக்கப்பட்ட விவரங்களில், பொருட்களின் அடையாள எண், மருந்தின் முறையான மருத்துவப் பெயர், பிராண்ட், தயாரிப்பாளர் பெயர் மற்றும் முகவரி, பேட்ச் எண், உற்பத்தி செய்யப்பட்ட நாள், காலாவதி தேதி, உற்பத்தியாளர் உரிமம் எண் ஆகியவை இடம் பெற வேண்டும்.
முன்னதாக மத்திய அரசு மருந்து நிறுவனங்களுக்கு வெளியிட்ட அறிவுறுத்தலில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கான உள்ளீட்டுப் பொருட்களிலும், அதன் அட்டைப் பெட்டிகளிலும் கண்டிப்பாக க்யூஆர் கோட் இடம் பெற வேண்டும். அதன் விவரங்களை சேமித்து வைத்து, மென்பொருளை ஆக்டிவாக வைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதும் நினைவுகூரத்தக்கது.