கச்சா எண்ணெய் அதிகரித்தபோதிலும் பெட்ரோல், டீசல் விலை உயரவில்லை: எவ்வளவு அதிகரிக்க வாய்ப்பு?
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் 105 டாலராக அதிகரித்தபோதிலும், இந்தியாவில் பெட்ரோல், டீசலில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. ஒருவேளை விலை உயர்த்தப்பட்டிருந்தால், லிட்டருக்கு ரூ.8 வரை கூடுதலாக மக்கள் கொடுத்திருக்க வேண்டும் என்று ஐசிஆர்ஏ ரேட்டிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் 105 டாலராக அதிகரித்தபோதிலும், இந்தியாவில் பெட்ரோல், டீசலில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. ஒருவேளை விலை உயர்த்தப்பட்டிருந்தால், லிட்டருக்கு ரூ.8 வரை கூடுதலாக மக்கள் கொடுத்திருக்க வேண்டும் என்று ஐசிஆர்ஏ ரேட்டிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுப்புக்குப்பின் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை விர்ரென உயர்ந்தது. கடந்த 2014ம் ஆண்டுக்குப்பின் கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கும் மேல் அதிகரித்தது, ஒரு பேரல் 105 டாலரை எட்டியது. உக்ரைன்-ரஷ்யா போரால் வரும் நாட்களில் கச்சா எண்ணெய் சர்வதேச சந்தையில் ஏறுமுகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் கடுமையாக அதிகரித்தபோதிலும் இந்தியாவில் கடந்த நவம்பர் மாதத்திலிருந்து பெட்ரோல், டீசல் விலையில் எண்ணெய் நிறுவனங்கள் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. ஏறக்குறைய 100 நாட்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமில்லாமல் நீடிக்கிறது.
உ.பி., பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலத் தேர்தல் நடப்பதால், தேர்தல் முடியும்வரை பெட்ரோல், டீசல் விலையை மாற்றம் செய்யாமல் மத்திய அரசு இருக்கிறது என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இருப்பினும், கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் 105 டாலராக அதிகரித்துவிட்டதால், எண்ணெய் நிறுவனங்கள் நிச்சயமாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில்தான் இருக்கின்றன.
இந்த 5 மாநிலத் தேர்தல் நடக்காமல் இயல்பான சூழல் நிலவியிருந்தால், கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஏற்ப மக்கள் பெட்ரோல், டீசலில் லிட்டருக்கு 8 ரூபாய் கூடுதலாக அளித்திருக்க வேண்டும்.
ஆனால், எண்ணெய் நிறுவனங்கள் விலை உயர்த்தாததால், பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல், மக்கள் லிட்டருக்கு ரூ.6 முதல் 8ரூபாய் வரை குறைவாக கொடுத்து வருகிறார்கள்.
தேர்தல்முடிந்தபின் பெட்ரோல், டீசலில் விலை உயர்வு வருவு ஏறக்குறைய உறுதியானாலும், அந்த விலை உயர்வை மத்திய அரசால் தடுக்க முடியும். மத்திய அரசு உற்பத்தி வரியைக் குறைக்கும் பட்சத்தில் எண்ணெய் நிறுவனங்கள் விலை உயர்வை மக்கள் மீது சுமத்தமாட்டார்கள். தற்போதிருக்கும் விலையே தொடரவும் வாய்ப்புள்ளது.
இதுகுறித்து ஐசிஆர்ஏ ரேட்டிங் நிறுவனத்தின் தலைமைப் பொருளாதார வல்லுநர் அதிதி நய்யார் விடுத்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
“ சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் தற்போது இருக்கும் விலை உயர்வுக்கு ஏற்ப, சில்லரை விலையில் பெட்ரோல், டீசலை எந்த அளவு உயர்த்திருக்க வேண்டும் என்பதை குறிப்பிட்டுக் கூறுவது கடினம். ஆனால், சராசரியாக பெட்ரோல், டீசல் மீது லிட்டருக்கு ரூ.6 முதல் ரூ.8வரை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியிருக்க வேண்டும். ஆனால், விலையை உயர்த்தவில்லை.
ஒருவேளை உற்பத்தி வரிக்குறைப்பை அடுத்த நிதியாண்டு தொடங்குவதற்குள் மத்திய அரசு கொண்டுவந்தால், அடுத்த நிதியாண்டில் அரசுக்கு ரூ.92 ஆயிரம் வரை இழப்பு ஏற்படும். ஆனால், 5 மாநிலத் தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை.
கடந்த ஜனவரி மாதம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சராசரியாக பேரல் 84.20 டாலராக இருந்தது, இது பிப்ரவரியில் சராசரியாக 10 சதவீதம் உயர்ந்து 93 டாலராக அதிகரித்துள்ளது. டாலரின் அடிப்படையில் 19 டாலர்கள் விலை உயர்ந்துள்ளது. இருப்பினும், இந்தியாவில் தொடர்ந்து 3-வது மாதமாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏதுமில்லை.
கடைசியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெட்ரோல்மீதான உற்பத்தி வரி ரூ.5, டீசல் மீது ரூ.10 குறைக்கப்பட்டது. அதன்பின் குறைக்கப்படவில்லை. அடுத்துவரும் நாட்களில் விலைஉயர்வை மக்கள் சந்திக்கக்கூடாது என்று அரசு விரும்பினால், பெருந்தொற்று காலத்துக்கு முன்பிருந்தவாறு உற்பத்தி வரியை கொண்டுவந்தால், அதாவது, பெட்ரோல்மீது லிட்டருக்கு ரூ.19.90, டீசல் மீது லிட்டருக்க ரூ.15.80 என்று நிர்ணயித்தால், மத்திய அரசுக்கு பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ள வரிவசூலில் 27 % குறையும்.
மக்கள் தற்போது பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.27.90 உற்பத்தி வரியாகவும், டீசல் மீது லிட்டருக்கு ரூ.21.80 பைசாவும் வரியாக செலுத்துகிறார்கள் என்பது கவனத்துக்குரியது.
உற்பத்தி வரிக்குறைப்பை மத்தியஅ ரசு செய்தால், நிதிப்பற்றாக்குறை இலக்கை அடைய முடியாது. பணவீக்கத்தையும் கட்டுக்குள் வைக்கலாம். வரியைக் குறைக்காவிட்டால் நிதிப்பற்றாக்குறை கட்டுக்குள் இருக்கும்,ஆனால், பணவீக்கம் உயர்ந்துவிடும்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது