ஒரு பான் கடைக்காரர் தன்னுடைய கடின உழைப்பாலும், ஆர்வத்தாலும் 2500 கோடி ரூபாய் மதிப்புள்ள வணிகப் பேரரசை உருவாக்கியுள்ளார். இளைஞர்களுக்கு அவரது கதை ஒரு உத்வேகமாக இருக்கும்.

Share Market Success stories: மனதில் பெரிய ஆசை இருந்து, அதை நோக்கி உழைத்தால், அது தாமதமாகினாலும் நிச்சயம் நிறைவேறும். புனேவைச் சேர்ந்த ஜதின் சூரத்வாலாவின் கதையும் அப்படித்தான். அவர் ஒரு காலத்தில் பான் கடை வைத்திருந்தார். ஆனால், அவர் தனது புத்திசாலித்தனத்தாலும், கடின உழைப்பாலும் 2500 கோடி ரூபாய் மதிப்புள்ள வணிகப் பேரரசை உருவாக்கியுள்ளார். ஜதின் பல போராட்டங்களை சந்தித்து வெற்றி பெற்றுள்ளார். அவரது கதை லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகமாக இருக்கும். பான் கடையிலிருந்து கோடிக்கணக்கான வணிகத்தை உருவாக்கிய அவரது கதையைப் பார்ப்போம்.

ஜதின் சூரத்வாலாவின்​​ பயணம் கடினமானது:

ஜதின் சூரத்வாலாவின் இளமைப் பருவம் புனேவில் கழிந்தது. அவரது தந்தைக்கு ஒரு பான் கடை இருந்தது. 15 வயது வரை ஜதினின் வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்தது. 25 ஜனவரி 1987 அன்று திடீரென்று தந்தையை இழந்தார். அதன் பிறகு, அவருடைய சகோதரர் பான் கடையை பார்த்துக் கொள்ள ஆரம்பித்தார். அவருடைய அம்மாவும் சகோதரியும் தோக்லா, இட்லி விற்பனை செய்யத் தொடங்கினர். குடும்பத்தினர் அவர் மீது எந்த அழுத்தத்தையும் கொடுக்கவில்லை. ஆனால், அவருக்கு தனது குடும்பத்திற்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் வந்ததுள்ளது. 

தீபாவளிக்கு பட்டாசு வியாபாரம் தொடங்கினார்

அவர் வாழ்க்கை குறித்து அவரே கூறி இருக்கும் செய்தியில், ''தீபாவளிக்கு முன்பு நான் பட்டாசு வியாபாரம் தொடங்கினேன். ஒவ்வொரு ஆண்டும் சீசனில் நான் கொஞ்சம் பணம் சம்பாதித்து சேமிக்க ஆரம்பித்தேன். அந்தப் பணத்தில் VCR வாங்கி, கேபிள் தொழிலைத் தொடங்கினேன். 1991 இல் என் சகோதரியின் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. நாங்கள் அனைவரும் குஜராத் சென்றோம். சில நாட்களுக்குப் பிறகு, என் அம்மா எங்களை விட்டுப் பிரிந்தார். அம்மாவை இழந்த பிறகு, நான் இந்த உலகில் தனியாக இருப்பது போல் உணர்ந்தேன்.

கடைக்கு கடன் வாங்க வேண்டியிருந்தது

பான் கடைக்கு நானும் என் சகோதரரும் கடன் வாங்க வேண்டியிருந்தது. எதிரே இருந்த கடைக்காரர் எங்களுக்கு 15 நாட்கள் அவகாசம் கொடுத்தார். சரியான நேரத்தில் முழுப் பணத்தையும் செலுத்தினோம். இதனால் சந்தையில் எங்களுக்கு நல்ல பெயர் கிடைத்தது.

எப்படி பேனா வாழ்க்கையை மாற்றியது

ஒரு நாள் நான் கடையில் உட்கார்ந்திருந்தேன். ஒரு வாடிக்கையாளர் வந்து பான் ஆர்டர் செய்தார். அவர் தொடர்ந்து என் கடையில் இருந்த பொருட்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து, சில பொருட்களைச் சுட்டிக்காட்டி, "இது என்ன?" என்று கேட்டார். நான், "இறக்குமதி செய்யப்பட்ட வாசனை திரவியம்" என்றேன். பிறகு அவர் ஒரு இறக்குமதி செய்யப்பட்ட பேனாவைக் கொடுத்து, "இதை உங்கள் கடையில் வைப்பீர்களா?" என்று கேட்டார். நான், "சரி, ஆனால் இதற்கான பணத்தை விற்ற பிறகு தருகிறேன்" என்றேன். அவர் சம்மதித்தார்.

பானை விடப் பேனா அதிக லாபம் தர ஆரம்பித்தது

சிறிது நேரத்தில் ஒரு வாடிக்கையாளர் வந்து பான் சாப்பிட்டுக் கொண்டே அந்தப் பேனாவைப் பார்த்தார். அதன் விலையைக் கேட்டார். நான் 35 ரூபாய் என்றேன். நான் அந்தப் பேனாவை 18 ரூபாய்க்கு வாங்கியிருந்தேன். அந்த வாடிக்கையாளர் அந்தப் பேனாவை வாங்கினார். பான் விற்பனை செய்து ஒரு நாளைக்கு நான் எவ்வளவு சம்பாதிக்கிறேன், ஆனால் இந்தப் பேனாவில் இருந்து இரண்டு மடங்கு லாபம் கிடைக்கிறது என்று நினைத்தேன். இந்தத் தொழில் எனக்குப் பிடித்திருந்தது. மறுநாள் அந்த நபர் மீண்டும் வந்து, "பேனா விற்றதா?" என்று கேட்டார். நான், "10 நிமிடங்களில் விற்றுவிட்டது" என்றேன். அதன் பிறகு அவர் எனக்கு மேலும் பேனாக்களைக் கொடுத்தார். கொஞ்சம் கொஞ்சமாக வியாபாரம் நன்றாக நடக்க ஆரம்பித்தது. பானை விடப் பேனாவில் அதிகமாகச் சம்பாதிக்க ஆரம்பித்தேன்.

நான் மசாலா முகவராக ஆனேன்

பான் மற்றும் பேனாவிலிருந்து நல்ல வருமானம் வரத் தொடங்கியதும், முழு வியாபாரத்தையும் என் சகோதரரிடம் ஒப்படைத்துவிட்டு, மசாலா முகவராக ஆனேன். பல நேரங்களில் டிரைவர் வரமாட்டார். அப்போது நானே ஆட்டோ ஓட்டிச் சென்று மசாலா பொருட்களை டெலிவரி செய்வேன். கொஞ்சம் கொஞ்சமாக என் தொழில் வளர ஆரம்பித்தது. நான் முதலில் C&F, பின்னர் சூப்பர் ஸ்டாக்கிஸ்ட் ஆனேன். அப்போது எனக்குக் கேபிள், பான்-பேனா மற்றும் மசாலா வியாபாரம் நடந்து கொண்டிருந்தது. இதற்கிடையில், ஒரு நண்பருடன் சேர்ந்து கட்டுமானத் துறையில் பணியாற்றத் தொடங்கினேன். இந்தத் தொழிலும் கொஞ்சம் கொஞ்சமாக வளர ஆரம்பித்தது.

2008 இல் சூரத்வாலா கட்டுமான நிறுவனம் உருவானது: 

2008 இல் சூரத்வாலா வணிகக் குழுமம் என்ற பெயரில் என் சொந்த நிறுவனத்தை தொடங்கினேன். 2017 இல் என் நண்பர் ஒருவர் மற்றும் சில தொழில்முனைவோருடன் BSE தலைமையகத்திற்கு செல்கிறோம். அங்கு சிறிய நிறுவனங்கள் சந்தையில் எப்படிப் பட்டியலிடலாம் என்பதை விளக்குவார்கள். அதன் பிறகு நான் அங்கு சென்று BSE-SME தலைவரைச் சந்தித்தேன். பட்டியலிடுவதன் நன்மைகள் மற்றும் எதிர்கால வாய்ப்புகள் பற்றி அவர் எங்களிடம் கூறினார்.

ஆகஸ்ட் 2020 இல் சூரத்வாலா வணிகக் குழுமம் பட்டியலிடப்பட்டது

என் நிறுவனத்தை BSEயின் SME தளத்தில் 13 ஆகஸ்ட் 2020 அன்று பட்டியலிட்டேன். ஆரம்பத்தில் என் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 26 கோடி ரூபாய். பின்னர் என் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் நல்ல லாபம் ஈட்டினர். இதற்காக BSE 2021 இல் எனக்குச் சிறந்த செயல்திறன் விருது வழங்கியது. 2023 இல் என் நிறுவனத்தை NSE மற்றும் BSEயின் பிரதான பலகையில் பட்டியலிட்டேன். அதே ஆண்டில், சூரிய சக்தி அடிப்படையிலான துணை நிறுவனத்தைத் தொடங்கினேன். இப்போது என் நிறுவனத்தின் மதிப்பு 2500 கோடி ரூபாயை எட்டியுள்ளது. என் நிறுவனம் இப்போது முதல் 1600 நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. ஆனால், அதை முதல் 500 நிறுவனங்களில் ஒன்றாகக் கொண்டு வர வேண்டும் என்பதே என் இலக்கு'' என்று தனது வாழ்க்கை பயணத்தை பகிர்ந்துள்ளார்.