NSE Chitra Scam: என்எஸ்இ வழக்கு: சித்ரா, ஆனந்த் சுப்பிரமணியனுக்கு ஜாமீன் வழங்க சிபிஐ எதிர்ப்பு: செபி கெடு
nse Chitra scam : தேசியப் பங்குச்சந்தையில் நடந்த கோ-லொகேஷன் வழக்கில் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா, உதவியாளர் ஆனந்த் சுப்பிரமணியன் ஆகியோருக்கு ஜாமீன் வழங்க சிபிஐ எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
தேசியப் பங்குச்சந்தையில் நடந்த கோ-லொகேஷன் வழக்கில் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா, உதவியாளர் ஆனந்த் சுப்பிரமணியன் ஆகியோருக்கு ஜாமீன் வழங்க சிபிஐ எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
3-வது முறை
சித்ரா ராமகிருஷ்ணா, ஆனந்த் சுப்பிரமணியன் இருவரும் இதுவரை 2 முறை ஜாமீன் மனு தாக்கல் செய்தனர், ஆனால் இருவருக்கும் ஜாமீன் வழங்கினால் சாட்சியங்களைக் கலைத்துவிடுவார்கள், ஆதாரங்களை அழித்துவிடுவார்கள் என சிபிஐ தரப்பில் எதிர்ப்புத் தெரிவித்ததால் ஜாமீன் மறுக்கப்பட்டது. இப்போது 3-வது முறையாக இருவரும் ஜாமீன் மனு தாக்கல் செய்தநிலையில் அதற்கும் சிபிஐ எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
கோ-லொகேஷன் ஊழல்
என்எஸ்இ அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாக சித்ரா ராமகிருஷ்ணா இருந்தபோது, என்எஸ்இ சர்வர்களுக்கு அருகே, சில குறிப்பிட்ட பங்குதரகு நிறுவனங்களின் சர்வர்கள் வைக்கப்பட்டன. இதனால், பங்குவிற்பனை, விலை, பரிமாற்றம் குறித்த தகவல்கள் விரைவாக அந்த தரகு நிறுவனங்களுக்குக் கிடைத்தால், கோடிக்கணக்கில் லாபமீட்டின.இது தொடர்பான புகார் எழுந்ததையடுத்து, கடந்த 2018ம்ஆண்டு சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தது.
அபராதம்
இதற்கிடையே சித்ரா தனது பதவிக்காலத்தில் தனக்கு ஆலோசகராக ஆனந்த் சுப்பிரமணியன் என்பவரை நியமித்தார். அவருக்கு குறுகிய காலத்தில் கோடிக்கணக்கில் ஊதிய உயர்வு அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டு குறித்து செபி விசாரி்த்து, சித்ராவுக்கு ரூ.3 கோடி, ஆனந்த் சுப்பிரமணியத்துக்கு ரூ.2 கோடி அபராதமும் விதித்தது.
கோ-லொகேஷன் வழக்கு குறித்து விசாரித்த சிபிஐ, ஆனந்த் சுப்பிரிமணியம், சித்ராவை கைது செய்து விசாரணை நடத்தியது. இருவரும் தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளனர்.
ஜாமீன் மனு
ஏற்கெனவே சித்ரா ராமகிருஷ்ணா தரப்பில் 2 முறை ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது அதை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. ஆனந்த் சுப்பிரமணியன் இருமுறை ஜாமீன் மனு தாக்கல் செய்தும் அவருக்கு ஜாமீன் வழங்கவில்லை.
இந்நிலையில் 3-வது முறையாக இருவரும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனு நேற்று சிபிஐ நீதிமன்ற நீதிபதி அகர்வால் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
எதிர்ப்பு
இருவரும் தங்களின் அதிகாரம், செல்வாக்கால் சாட்சிகளையும் ஆதாரங்களையும் அழித்துவிடுவார்கள். குற்றம்தன்மை, குற்றத்தின் இயல்பு ஆகியவை தீவிரமானது என சிபிஐ தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து, சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் அகர்வால், சித்ரா, ஆனந்த் ஆகியோரின் ஜாமீன் மனு விசாரணையை மே 9ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
செபி கெடு
இதற்கிடையே முன்னாள் ஆலோசகர் ஆனந்த் சுப்பிரமணியன் என்எஸ்இக்கு ஏற்படுத்திய இழப்புக்காக ரூ.2.05 கோடி இழப்பீடு கேட்டு பங்குச்சந்தை ஒழுங்கமைப்பான செபி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அடுத்த 15 நாட்களுக்குள் ரூ.2.05 கோடியைச் செலுத்தாவிட்டால், சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும், கைது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.