Nokia 6G : 6G வரும்போது, ஸ்மார்ட்போன் இருக்காது: புதிர் போட்ட Nokia CEO
nokia mobile :இன்னும் 10 ஆண்டுகளில் உலகில் ஸ்மார்ட்போன் என்ற கான்செப்டே இருக்காது, மக்கள் ஸ்மார்ட்போனைவிட புதிய தொழில்நுட்பத்துக்கு மாறிவிடுவார்கள் என்று நோக்கியோ சிஇஓ பெக்கா லுன்ட்மார்க் தெரிவித்தார்.
இன்னும் 10 ஆண்டுகளில் உலகில் ஸ்மார்ட்போன் என்ற கான்செப்டே இருக்காது, மக்கள் ஸ்மார்ட்போனைவிட புதிய தொழில்நுட்பத்துக்கு மாறிவிடுவார்கள் என்று நோக்கியோ சிஇஓ பெக்கா லுன்ட்மார்க் தெரிவித்தார்.
இன்றைய நவீன காலத்தில் ஸ்மார்ட்போன் மக்களுக்கு அத்தியாவசியப் பொருளாக மாறிவிட்டது. ஏராளமான மக்கள் காலையில் கண்முழித்தது முதல் இரவு தூங்கும்வரை செல்போனை விட்டுப் பிரிவதில்லை.
இந்நிலையில் ஸ்விட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார மாநாடு நடந்து வருகிறது. இதில் நோக்கியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பெக்கா லுண்ட்மார்க் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
தொலைத்தொடர்பு துறையில் புதுப்புது தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டு புழக்கத்துக்கு வரும்போது, பழைய தொழில்நுட்பங்கள் வழக்கில் இல்லாமல் போகும். அதுபோல், நாம் இப்போது பயன்படுத்தும் ஸ்மார்ட்ஃபோன்கள் எல்லாம் அடுத்த 10 ஆண்டுகளில் தொழில்நுட்ப வளர்ச்சியால் காணாமல் போகும்.
2030ம் ஆண்டு தொடக்கத்தில் 6ஜி தொழில்நுட்பம் உலகிற்கு அறிகமுகமாகும், அந்த நேரத்தில் உலகில் ஸ்மார்ட்ஃபோன் என்ற கருப்பொருள் வழக்கில் இருக்காது. அந்த தொழில்நுட்பம் வரும்போது, நாம் செல்போனே சுமந்துக்கொண்டிருக்கத் தேவையும் இருக்காது, உடலுக்குள் நமது மூளைக்குள் அதற்குரிய கருவிகள் பொருத்தப்படும். ஸ்மார்ட்ஃபோனில் இருக்கும் டச் ஸ்கீரீன் போல், ஸ்மார்ட் ஸ்க்ரீன் புழக்கத்துக்கு வந்துவிடும்.
6ஜி தொழில்நுட்பம் உலகிற்கு அறிமுகமாகும்போது இந்த தொழில்நுட்பங்கள் அனைத்தும் சாத்தியமாகும். நிச்சமயாக இன்று நாம் அனைவருக்கும் பரிட்சயமாக இருக்கும், பயன்பாட்டில் இருக்கும் ஸ்மார்ட்ஃபோன் அந்த நேரத்தில் இருக்காது. பல கருவிகள் நேரடியாக உங்கள் உடலில் பொருத்தப்படும்.
6ஜி தொழில்நுட்பம் வர்த்தகரீதியாக வரும்போது, அனைத்தும் மாற்றமடையும். உடலில் பொருத்தப்படும் சிப் மூலம் இன்டர்நெட்டை பெறும் வசதி, தகவல்தொடர்பு வசதி உள்ளிட்ட பலவசதிகள் சாத்தியமாகும்.
அந்த கருவிகள் மொபைல்போன்கள் போன்று இருக்குமா என்று எனக்குத் தெரியாது. ஆனால், அந்தத்தொழில்நுட்பம் வரும். 6ஜி தொழில்நுட்பம் தகவல் தொடர்புதுறையில் பெரிய மாற்றத்தை உருவாக்கும். 6ஜி பயன்படுத்தும்போது அதிக மின்சாரமும், அதிவேக இன்டர்நெட்டும் அவசியம். தற்போது இருக்கும் இணையதளத்தின் வேகத்தைவிட 100 மடங்கு அல்லது 1000 மடங்கு வேகம் தேவை” எனத் தெரிவித்தார்
இதற்கிடையே டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் சமீபத்தில் அளித்த பேட்டியில், “ மனிதர்களின் மூளைக்குள் கணினி சிப் பொருத்தும் தொழில்நுட்பத்தை நாங்கள் ஏற்கெனவே பரிசோதித்துவிட்டோம். மூளைச் சதையில் இந்த சிப்பை பொருத்திவிடுவோம். தேவையான சார்ஜ் வயர்லெஸ் முறையால் வழங்கப்படும். உடலில் சிப் பொருத்தப்பட்ட உணர்வே இல்லாமல் இயல்பாக இருப்பார்கள்” எனத் தெரிவதித்தார்.