nirav modi news: நிரவ் மோடியின் நெருங்கிய கூட்டாளி சுபாஷ் சங்கர் கைது: எகிப்திலிருந்து அழைத்துவந்தது சிபிஐ
nirav modi news: பஞ்சாப் நேஷனல் வங்கியில் கோடிக்கணக்கில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்குத் தப்பி ஓடிய நகைவியாபாரி நிரவ் மோடியின் நெருங்கிய கூட்டாளி சுபாஷ் சங்கர் பராபை சிபிஐ அதிகாரிகள் எகிப்தில் கைது செய்தனர்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் கோடிக்கணக்கில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்குத் தப்பி ஓடிய நகைவியாபாரி நிரவ் மோடியின் நெருங்கிய கூட்டாளி சுபாஷ் சங்கர் பராபை சிபிஐ அதிகாரிகள் எகிப்தில் கைது செய்தனர்.
கெய்ரோவில் கைது
சுபாஷ் சங்கரை எகிப்து நாட்டின் கெய்ரோவிலிருந்து இ்ந்தியாவுக்கு இன்று அதிகாலை சிபிஐ அதிகாரிகள் அழைத்து வந்தனர். இன்று பிற்பகலில் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவார்கள் எனத் தெரிகிறது
பஞ்சாப் நேஷனல் வங்கி
நிரவ் மோடி நடத்திய ஃபயர்ஸ்டார் டைமண்ட் நிறுவனத்தில் துணை பொது மேலாளராக சுபாஷ் சங்கர் இருந்தார். இந்த நிறுவனம்தான் ரூ.7ஆயிரம் கோடியை வங்கியில் கடன் பெற்று மோசடி செய்தது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிரவ்மோடி, மெகுல் சோக்ஸி இருவரும் ஆயிரக்கணக்கிலான கோடி கடன் பெற்று ரூ.13ஆயிரம் கோடி இழப்பை ஏற்படுத்தினர்.
லண்டனில் நிரவ் மோடி
இதில் நிரவ் மோடி இந்தியாவிலிருந்து தப்பி லண்டனுக்குச் சென்றார். அங்கு சிபிஐ அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் நிரவ் மோடி அங்கு கைது செய்யப்பட்டு 2019ம் ஆண்டு மார்ச் 19ம் தேதியிலிருந்து லண்டன் வேண்ட்ஸ்வெர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரையும் இந்தியா அழைத்துவரும் பணியில் சிபிஐ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
சோக்ஸி
மெகுல் சோக்ஸி கடந்த 2017ம் ஆண்டு ஆன்டிகுவா, பர்படாஸ் தீவுக்கு தப்பிச் சென்று அங்கு குடியுரிமை வாங்கிவிட்டார். இவரையும் அழைத்துவரும் பணியில் சிபிஐ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
சிபிஐ நடவடிக்கை
இந்நிலையில் நிரவ் மோடிக்கு நெருக்கமான கூட்டாளி சுபாஷ் கடந்த 2018ம் ஆண்டு துபாயிலிருந்து கெய்ரோவுக்கு, மெகுல் சோக்ஸி குடும்பத்துடன் சேர்ந்து தப்பிச் சென்று வாழ்ந்துவந்தார். இந்த தகவல் அறிந்த சிபிஐ அதிகாரிகள் அங்கு சென்று அவரைக் கைது செய்து இந்தியா அழைத்து வந்துள்ளனர்.
இதுகுறித்து சிபிஐ தரப்பில் கூறுகையில் “ நிரவ் மோடிக்கு நெருங்கியவரான சுபாஷ் கெய்ரோவில் கைது செய்யப்பட்டு, அங்கிருந்து மும்பைக்கு இன்று அதிகாலை அழைத்து வரப்பட்டார். இன்று பிற்பகலில் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். நிரவ்மோடி சார்பில் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு எல்ஓயு உறுதியளிப்பு கடிதங்களை வழங்கியவர் சுபாஷ் என்பது தெரியவந்தது” எனத் தெரிவித்தனர்