Adani Shares: அதானி குழும நிறுவங்களில் மேலும் முதலீடுகளை அதிகரித்த எல்ஐசி!!
ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை இந்தியப் பங்குச் சந்தையை மட்டுமின்றி கவுதம் அதானி நிறுவனங்களின் பங்குகளையும் புரட்டிப் போட்டது என்றால் மிகையாகாது.
ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்தின் தாக்கம் இன்றும் அதானியின் பங்குகளில் பிரதிபலித்து வருகிறது. இந்த நிறுவனத்தின் அறிக்கை வெளியானதில் இருந்து கடந்த ஜனவரி மாதம் முதல் அதானி நிறுவனங்களின் பங்குகளை முதலீட்டாளர்கள் விற்று வருகின்றனர். முதலீட்டாளர்களிடம் நம்பகத்தன்மை இழந்து காணப்படுகிறது. ஏற்கனவே, அதானி நிறுவனங்களில் எல்ஐசி பெரிய அளவில் முதலீடு செய்து இருக்கிறது. தற்போது மேலும் அதிகரித்துள்ளது. அதானியின் நான்கு நிறுவனங்களில் விமானம் முதல் பல்பொருள் நிறுவனங்கள் மீதான பங்கை எல்ஐசி அதிகரித்துள்ளது. இது அதானி நிறுவனங்களின் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டு அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.
மேலும், முதலீட்டாளர்களும் அதானி நிறுவங்களில் முதலீடு செய்வதை அதிகரித்து இருப்பது மார்ச் 31 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட நிறுவன அறிக்கையில் இருந்து தெரிய வந்துள்ளது. Flagship என்று கூறப்படும் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் சில்லறை பங்குதாரர்களின் பங்கு முதலீடு 7.9% அதிகரித்துள்ளது.
முன்னதாக, ஹிண்டர்பர்க் ரிசர்ச் நிறுவனம் அதானி குழும நிறுவனம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டு இருந்தது. அதாவது, அதானி குழுமம் தனது பங்குகளின் மதிப்பை பல மடங்கு உயர்த்தி வர்த்தகம் செய்து இருந்ததாக தெரிவித்து இருந்தது. இது பெரிய அளவில் இந்திய பங்குச் சந்தையை பாதித்தது. அதானி நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு பாதியாக குறைந்தது. இதனால், அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்து இருந்த எல்ஐசி நிதி குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டு இருந்தன.
Gold Rate Today: மீண்டும் எகிறிய தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன?
எல்ஐசி பொதுத்துறை நிறுவனம் என்பதால் சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் அதானி எண்டர்பிரைசஸ்சில் தனது பங்கு இருப்பை எல்ஐசி பொதுத்துறை நிறுவனம் 4.26 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது இதற்கு முன்பு 4.23 சதவீதமாக இருந்தது. மார்ச் மாதத்தில் அதானி கிரீன் ஹவுஸ், அதானி டோட்டல் காஸ், அதானி டிரான்ஸ்மிஷன், அதானி என்டர்பிரைசஸ் ஆகியவற்றில் முதலீடுகளை எல்ஐசி அதிகரித்துள்ளது. ஏசிசியில் பங்குகளில் எந்த மாற்றத்தையும் எல்ஐசி செய்யவில்லை. ஆனால், அதானி போர்ட்ஸ் மற்றும் அம்புஜா சிமெண்ட்ஸ் ஆகியவற்றில் தனது பங்குகளை எல்ஐசி குறைத்து இருந்தது. மார்ச் மாத காலாண்டு அறிக்கையின்படி, அதானி குழுமத்தில் எல்ஐசி 3,57,500 பங்குகளை கூடுதலாக வாங்கியுள்ளது.
அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் எல்ஐசியின் பங்கு டிசம்பர் காலாண்டில் 4.23 சதவீதத்தில் இருந்து மார்ச் இறுதியில் 4.26 சதவீதமாக உயர்ந்துள்ளதாக பங்குச் சந்தைகளின் தரவுகள் தெரிவிக்கின்றன.
அதானி கிரீன் எனர்ஜியைப் பொறுத்தவரை, நிறுவன முதலீட்டாளர் 2,14,70,716 பங்குகளை அல்லது 1.36 சதவீத பங்குகளை மார்ச் 31, 2023 நிலவரப்படி வைத்திருந்தார். இது அதானி நிறுவனத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 31- ல் வைத்திருந்த 1.28 சதவீத பங்குகளை விட 8 அடிப்படை புள்ளிகள் அதிகம்.
அதானி டோட்டல் காஸில், டிசம்பர் காலாண்டின் முடிவில் எல்ஐசி நிறுவனத்தின் பங்கு இருப்பு 5.96 சதவீதத்தில் இருந்தது. இது, 6 அடிப்படைப் புள்ளிகள் அதிகரித்து 6.02 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதானி டிரான்ஸ்மிஷனில் எல்ஐசி பங்குகள் இருப்பு 3.65 சதவீதத்தில் இருந்து 3.68 சதவீதமாக உயர்ந்துள்ளது.
அதானி குழும நிறுவனங்களில் எல்ஐசியின் முதலீடு, ஜனவரி 2023 இறுதியில் ரூ. 30,127 கோடியாக இருந்தது. அதானி குழுமத்தை காப்பாற்ற எஸ்பிஐ மற்றும் எல்ஐசி முதலீடு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி இருந்தார். இது அரசியல் பிரச்சினையாக உருவெடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
வளர்ச்சி 5.9 சதவீதம்... இந்தியா தான் வேகமாக வளரும் நாடு: சர்வதேச செலாவணி நிதியம் கணிப்பு