டாடாவுக்கு போட்டி: இன்டிகோ ஏர்லைன்ஸ் மேலாண் இயக்குநராக ராகுல் பாட்டியா நியமனம்
ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்கியதால் விமானப்போக்குவரத்து சந்தையில்கடும் போட்டி எழுந்துள்ளதையடுத்து, அதைச் சமாளிக்கும் பொருட்டு, இன்டிகோ நிறுவனம் தனது நிறுவனர்களில் ஒருவரான ராகுல் பாட்டியாவை மேலாண் இயக்குநராக நியமித்துள்ளது.
ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்கியதால் விமானப்போக்குவரத்து சந்தையில்கடும் போட்டி எழுந்துள்ளதையடுத்து, அதைச் சமாளிக்கும் பொருட்டு, இன்டிகோ நிறுவனம் தனது நிறுவனர்களில் ஒருவரான ராகுல் பாட்டியாவை மேலாண் இயக்குநராக நியமித்துள்ளது.
உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் சந்தைப்படுத்துதலில் அதிகமான கவனம் செலுத்தும் நோக்கில் ராகுல் பாட்டியாவை இன்டிகோ நிறுவனம் நியமித்துள்ளது.
ஏர் இந்தியாவை அரசிடம் இருந்து டாடா குழுமம் வாங்கியதையடுத்து, கடும்போட்டி உருவாகியுள்ளதையடுத்து, இன்டிகோ நிறுவனம் அதிரடியான முடிவைஎடுத்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதால், வரும்நாட்களில் விமானப் போக்குவரத்து சூடுபிடிக்கும், சர்வதேச சந்தையிலும் போக்குவரத்து அதிகரிக்கும் என்பதால், ராகுல் பாட்டியாவை இன்டிகோ நிறுவனம் நியமித்துள்ளது.
இன்டிகோ நிறுவனத்தின் நிறுவனர்களான ராகுல் பாட்டியா, ராகேஷ் காங்வாலுக்கும் இடையே பங்குகள் ஒப்பந்தம் தொடர்பான சிக்கல் இருக்கும் நிலையில் ராகுல் பாட்டியாவை மேலாண் இயக்குநராக நிறுவனத்தின் இயக்குநர்கள் வாரியக்குழு நியமித்து முடிவு எடுத்துள்ளது.
இன்டிகோ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ரோனோஜாய் தத்தா கூறுகையில் “ ராகுல் பாட்டியா ஓய்வின்றி உழைக்கக்கூடிய மனிதர், சுறுசுறுப்பான தொழில்முனைவோர். வர்த்தகத்திலும் தொழிலிலும் எப்போதும் மிகப்பெரிய வாய்ப்புகளை எதிர்நோக்கி இருப்பவர். வெளிநாட்டு வர்த்தகத்தை கவனிக்கும் ராகுல் பாட்டியா நிர்வாகத்தை சிறப்பாக வழிநடத்தக்கூடியவர்” எனத் தெரிவித்தார்.
இன்டிகோ நிறுவனத்தின் 3-வது காலாண்டு நிகர லாபம் ரூ.129.80 கோடியாக அதிகரி்த்துள்ளது. ஆனால், நிறுவனத்தின் நிகர இழப்பு ரூ.620.1 கோடியாக இருக்கிறது. 2021, டிசம்பர் மாதம் முடிவில் 3-வது காலாண்டில் ரூ.9,480 கோடி வருமானம் இன்டிகோ நிறுவனத்துக்கு கிடைத்துள்ளது என தகவல் வெளியானது. இந்த சூழலில் ராகுல் பாட்டியா மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்டிகோ நிறுவனம் நாள்தோறும் 1500 விமானங்களை இயக்குகிறது. இது தவிர 71 இணைப்பு விமானங்களை உள்நாட்டிலும், வெளிநாடுகளுக்கு 24 விமானங்களையும் இயக்குகிறது