இந்த ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7% ஐ தாண்டும்: ரிசர்வ் வங்கி ஆளுநர் கணிப்பு
2023ஆம் நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதத்துக்கு அதிகமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.
கடந்த நிதியாண்டின் மூன்றாவது மற்றும் நான்காவது காலாண்டில் பராமரிக்கப்பட்ட பொருளாதார வேகத்தின் பின்னணியில், 2022-23ஆம் ஆண்டிற்கான பொருளாதார வளர்ச்சி முன்கூட்டியே மதிப்பிடப்பட்ட அளவான 7 சதவீதத்தை விட அதிகமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரியில் தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட இரண்டாவது மதிப்பீட்டின்படி, முந்தைய நிதியாண்டில் 8.7 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி 2022-23ல் 7 சதவீதமாக இருக்கும் என கூறப்பட்டது. இந்நிலையில், இன்று (புதன்கிழமை) டெல்லியில் நடந்த சிஐஐ நிகழ்வில் பேசிய ஆர்பிஐ ஆளுநர், "இது இன்னும் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது... கடந்த ஆண்டு ஜிடிபி வளர்ச்சி 7 சதவீதத்திற்கு மேல் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை" எனக் கூறினார்.
2022-23 ஆம் ஆண்டிற்கான தற்காலிக வருடாந்திர கணிப்புகள் மே 31ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவில் டெஸ்லா தொழிற்சாலை வருவது எப்போது? எலான் மஸ்க் சொன்ன குட் நியூஸ்!
"மூன்றாம் காலாண்டில் பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஆதரவான நிலை இல்லாதது. ஆனால் கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் அனைத்து பொருளாதார குறியீடுகளும் பொருளாதார நடவடிக்கைகளின் வேகத்தை நீடித்தன. ரிசர்வ் வங்கியால் கண்காணிக்கப்படும் அனைத்து குறியீடுகளும், நான்காவது காலாண்டில் வேகமான முன்னேற்றத்துடன் காணப்படுகின்றன. இதனால் வளர்ச்சி 7 சதவீதத்தை விட சற்று அதிகமாக இருந்தால் ஆச்சரியப்பட வேண்டாம்” என்றார்.
நடப்பு நிதியாண்டில், ரிசர்வ் வங்கி 6.5 சதவீத வளர்ச்சி விகிதத்தை கணித்துள்ளது என்ற அவர், உலகளாவிய சூழ்நிலையைப் பற்றி பேசும்போது, "இந்த உலகளாவிய நிச்சயமற்ற நிலைகளுக்கு மத்தியில், இந்திய வங்கி அமைப்பு நிலையான மற்றும் வலுவான மூலதனம் மற்றும் பணப்புழக்க நிலையுடன் இருக்கிறது" என சக்திகாந்த தாஸ் கூறினார்.
கடந்த ஏப்ரல் மாதத்தில், ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 6.5 சதவீதமாக வைத்திருக்க முடிவு செய்தது. அதற்கு முன், மே 2022 முதல் ரெப்போ விகிதத்தை 250 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியது.
வரவிருக்கும் நிதிக் கொள்கைக் கூட்டத்தில் எடுக்கப்பட உள்ள முடிவுகள் பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அவர், "இது என் கைகளில் இல்லை. அனைத்தும் சூழ்நிலையைப் பொறுத்தது. சூழலில் என்ன நடக்கிறது என்பதன் மூலம் நான் இயக்கப்படுகிறேன். கள நிலவரம் என்ன? போக்குகள் எப்படி இருக்கின்றன? பணவீக்க எவ்வாறு இருக்கிறது? என அனைத்தையும் கவனிக்க வேண்டியிருக்கிறது" என்றார்.
உலகப் பொருளாதாரம் அரசியல் நிச்சயமற்ற தன்மை, பணவீக்க உயர்வு, நிலையற்ற நிதிச் சந்தைகள், வங்கித்துறை அழுத்தம், உணவுப் பாதுகாப்பின்மை, கடன் நெருக்கடி போன்றவற்றில் சிக்கித் தவிக்கிறது என்றார். நாட்டில் போதுமான அந்நிய செலாவணி கையிருப்பு இருப்பதாகவும், ரூபாயின் மாற்று விகிதத்தை பராமரித்து வருவதாகவும் உறுதி அளித்தார்.
புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்படும் தமிழர்களின் செங்கோல் வரலாறு!