நடப்பாண்டில் கடந்த மார்ச் மாதத்தில் ஜிஎஸ்டி ரூ. 1.60 லட்சம் கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இதுவரை வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டி கலெக்ஷனில் இது இரண்டாவது அதிக தொகையாகும். 

ஜிஎஸ்டி அதிகமாக வசூல் ஆகியிருக்கும் காரணத்தால் நாட்டின் வருவாயும் 22 சதவீதம் அதிகரித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் மாதத்தில் ஜிஎஸ்டி பதிவு செய்யப்பட்ட வர்த்தகங்களில் 91 சதவீதத்திற்கும் அதிகமானோர் வருமானத்தை தாக்கல் செய்து வரிகளை செலுத்தி இருப்பதும் தெரிய வந்துள்ளது. இது பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதுகுறித்து நிதியமைச்சகம் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், ''மார்ச் 2023-ல் வசூலிக்கப்பட்ட மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1,60,122 கோடி. இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ. 29,546 கோடி. மாநில ஜிஎஸ்டி ரூ. 37,314 கோடி. ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ. 82,907 கோடி. இதில், ரூ. 42,503 கோடி பொருட்களின் இறக்குமதியில் வசூலிக்கப்பட்டது. வரி மீதான இரட்டை வரி விகிதத்தின் மூலம் ரூ. 10,355 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது'' என்று தெரிவித்துள்ளது. 

கடந்த 2022 ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதம் அதிகபட்சமாக ஜிஎஸ்டி ரூ. 1.68 லட்சம் கோடி வசூல் செய்யப்பட்டு இருந்தது. இதுதான் அதிகபட்சமான ஜிஎஸ்டி வரி வசூலிப்பாகும். இதையடுத்து கடந்த மார்ச் மாதத்தில் அதிகபட்சமாக ரூ. 1.60 லட்சம் கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. 2022-23 ஆம் நிதியாண்டில், மொத்த சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) 22 சதவீதம் அதிகரித்து ரூ. 18.10 லட்சம் கோடியாக உள்ளது. முழு ஆண்டுக்கான சராசரி மாத வசூல் ரூ. 1.51 லட்சம் கோடியாக உள்ளது.

இந்தியா - மலேசியா இடையேயான வர்த்தகத்தை ‘இந்திய ரூபாய்’ மதிப்பிலேயே இனி செய்யலாம்.! மத்திய அரசு தகவல்

கடந்த ஆண்டு மார்ச் மாதம் வசூலான ஜிஎஸ்டி வரியுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டில் கடந்த மார்ச் மாதம் ஜிஎஸ்டி வரி வசூல் 13 சதவீதம் அதிகமாகும். முந்தைய ஆண்டின் மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், கடந்த மார்ச் மாதம் சரக்குகளின் இறக்குமதியின் வருவாய் 8 சதவீதம் அதிகமாகவும், உள்நாட்டு பரிவர்த்தனையின் (சேவைகளின் இறக்குமதி உட்பட) வருவாய் 14 சதவீதம் அதிகமாகவும் இருந்துள்ளது.

2023, மார்ச் மாதத்தில் வரி வருவாய் ரிட்டர்ன் தாக்கல் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாக இருப்பதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. நடப்பு பிப்ரவரியில் 93.2 சதவீத இன்வாய்ஸ் அறிக்கைகள் (ஜிஎஸ்டிஆர்-1ல்) மற்றும் 91.4 சதவீத ரிட்டர்ன்கள் (ஜிஎஸ்டிஆர்-3பியில்) மார்ச் மாதம் வரை தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதுவே முந்தைய ஆண்டின் மார்ச் மாதத்தில் 83.1 சதவீதம் மற்றும் 84.7 சதவீதமாக இருந்துள்ளது.

சிங்கப் பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! அஞ்சல் சேமிப்புத் திட்ட வட்டி விகிதம் உயர்வு! முழு விவரம்