சென்னையில் ஆபரணத்தங்கம் விலை பண்டிகை கால தேவை மற்றும் சர்வதேச முதலீடுகள் அதிகரிப்பால் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஒரு கிராம் தங்கம் ₹10,640 ஆகவும், ஒரு சவரன் ₹85,120 ஆகவும் விற்கப்படுகிறது. 

புதிய உச்சத்தை நோக்கி செல்லும் தங்கம்

சென்னையில் ஆபரணத்தங்கம் விலை 2 நாளாக தொடர்ந்து உயர்வடைந்துள்ளது. இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்கியுள்ள நிலையில் தேவை அதிகரித்துள்ளதால் தங்கம் விலையில் ஏற்றம் காணப்படுகிறது.

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்து 10 ஆயிரத்து 640 ரூபாயாக உள்ளது. அதேபோல் ஒரு சவரன் ஆபரணத்தங்கம் 720 ரூபாய் அதிகரித்து 85,120 ரூபாயாக உள்ளது. சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கியதே இதற்கு காரணமாக தங்க நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். 1 கிலோ பார்வெள்ளி ஒரு லட்சத்து 59 ஆயிரம் ரூபாயாக உள்ளது.

அதேபோல் மதுரை, கோவை, தூத்துக்குடி, திருச்சி ஆகிய நகரங்களில் ஆபரணத்தங்கத்தின் விலை 10 ஆயிரத்து 640 ரூபாயாக உள்ளது. தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக கருதுவதால் விலை ஏற்ற இறக்கத்திற்கு காத்திருக்காமல் கையில் பணம் இருந்தால் அதனை தங்கத்தில் முதலீடு செய்வதை நடுத்தர வர்க்கத்தினர் வாடிக்கையாக கொண்டிருப்பதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அவசரம் வேண்டாம் காத்திருந்து வாங்கலாம் 

இந்த விலை ரீடைல் சந்தையிலும் எதிரொலிக்கும் என்பதால் தங்கத்தை வாங்குவோர் திட்டமிட்டு வாங்குவது அவசியம். பண்டிகை காலம் தொடங்கியுள்ளதும், அமெரிக்காவில் அதீத கடன் மற்றும் நிதி பற்றாக்குறை அந்நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் சிக்கலாக மாறும் என முதலீட்டாளர்கள் நம்புவதாலும் தங்கம் மீதான முதலீட்டு அதிகரிக்க வழிவகுத்துள்ளது. இதனால் அடித்தட்டு மக்கள் கொஞ்சம் காத்திருந்து தங்கத்தில் முதலீடு செய்யலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.