சர்வதேச பொருளாதார காரணங்களால் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ₹8,920, சவரனுக்கு ₹71,360க்கு விற்பனையாகிறது. சர்வதேச சந்தைகளில் நிலையற்ற தன்மை காரணமாக முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது.

சர்வதேச பொருளாதார காரணங்களால் ஆபரணத்தங்கத்தின் விலை சற்று உயர்ந்துள்ளது. வெள்ளிக்கிழமையில் தங்கம் வாங்கினால் செல்வம் செழிக்கும் என்ற செண்டிமென்ட் இந்திய சந்தையில் எதிரொலித்தாலும், சர்வதேச காரணங்களால் ஆசிய, ஐரோப்பிய சந்தைகளிலும் தங்கத்தின் விலையில் ஏற்றம் காணப்பட்டது.

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 25 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று ₹71 ஆயிரத்து 360க்கு விற்பனை செய்யப்படுகின்றது. இது நேற்றைய விலையை விட 200 ரூபாய் அதிகமாகும். அதேபோல் மதுரை, கோயம்புத்தூர், நெல்லையில் ஒரு கிரா தங்கம் விலை 8,920 ரூபாயாக உள்ளது. திருமண நாட்கள் தொடங்குவதற்கு முன்பாகவே தங்கம் விலையில் ஏற்றம் ஏற்பட்டுள்ளது நடுத்தர மக்களை பாதித்துள்ளது. அதேபோல் வெள்ளி மாற்றம் இல்லாமல் 1 கிராம் 111 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் (22 கேரட்) விலை நிலவரம்

30-05-2025 - ஒரு சவரன் ரூ.71,360, ஒரு கிராம் ரூ.8,920

29-05-2025 - ஒரு சவரன் ரூ.71,160, ஒரு கிராம் ரூ.8,895

28-05-2025 - ஒரு சவரன் ரூ.71,480 ஒரு கிராம் ரூ.8,935

27-05-2025 - ஒரு சவரன் ரூ.71,960 ஒரு கிராம் ரூ.8,995

26-05-2025 - ஒரு சவரன் ரூ.71,600, ஒரு கிராம் ரூ.8,950

அமெரிக்காவின் தலையீடு சர்வதேச சந்தைகளில் நிலையான தன்மையை ஏற்படுத்தாததால் பங்குச்சந்தைகளில் இருந்து வெளியேறிய முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கினர். ஆசிய, ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்கள் உலோகங்களில் முதலீடுகளை அதிகப்படுத்தி வருவதும் தங்கம் விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.

இந்தியாவையும் தங்கத்தின் சென்டிமென்டையும் பிரிக்கவே முடியாது என கூறும் சந்தை நிபுணர்கள், தங்கத்தின் விலை உயர்வை பொதுமக்கள் பெரிதுபடுத்த தேவையில்லை எனவும் காத்திருந்து வாங்கலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர். முதலீட்டுக்காக அல்லாமல் திருமணம் உள்ளிட்ட தேவைகளுக்கு நகைகளை வாங்குவோரும் வரா இறுதிவரை காத்திருக்கலாம் எனவும் தங்க நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஜுலாணி தெரிவித்துள்ளார். வரும் நாட்களில் சிறிய ஏற்ற இறக்கங்களே இருக்கும் கூறும் சந்தை நிபுணர்கள், சீட்டு காட்டுவோர் மட்டும் விலை குறையும் நாட்களை மட்டும் பயன்படுத்திகொள்ள வேண்டும் அறிவுறுத்தியுள்ளனர்.