Hyundai and Kia recall : காரை திறந்த வெளியில் நிறுத்திட்டு ஓடிடுங்க- ஷாக் கொடுத்த ஹூண்டாய், கியா!
ஹூண்டாய் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களிடம் காரை திறந்த வெளியில் நிறுத்த அறிவுறுத்தி இருக்கிறது.
தென் கொரியாவை சேந்த கார் உற்பத்தியாளர் ஹூண்டாய் மற்றும் அதன் துணை பிராண்டான கியா சுமார் 4 லட்சத்து 84 ஆயிரம் வாகன உரிமையாளர்களிம் காரை திறந்த வெளியில் மற்ற வாகனங்கள் அருகில் இல்லாத வகையில் பார்க் செய்ய அறிவுறுத்தி இருக்கிறது. கார்களில் தீப்பிடிக்கும் அபாயம் கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து இரு நிறுவனங்கள் இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
ரீ-கால் வழிமுறைகள் முழுமையாக நிறைவுபெறும் வரை அமெரிக்க வாடிக்கையாளர்கள் தங்களின் காரை இவ்வாறு நிறுத்த வேண்டும் என இரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன. ஹூண்டாய் மற்றும் கியா கார்களில் உள்ள ஹைட்ராலிக் எலெக்டிரானிக் கண்ட்ரோல் யூனிட் பாழாகி இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது. இது எலெக்ட்ரிக்கல் ஷாட் ஆக அதிக வாய்ப்புகள் உள்ளன. ரீ-கால் செய்யப்படும் வாகனங்களின் சர்கியூட் போர்டில் புதிய ஃபியூஸ் பொருத்தப்பட இருக்கின்றன.
2014 முதல் 2016 வரை விற்பனை செய்யப்பட்ட கியா ஸ்போர்டேஜ், 2016 முதல் 2018 வரை விற்பனை செய்யப்பட்ட கியா K900 மற்றும் 2016 முதல் 2018 வரை விற்பனை செய்யப்பட்ட ஹூண்டாய் சேண்டா-ஃபெ மாடல்கள் ரீ-கால் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 1,26,747 கியா வாகனங்களும், 3,57,830 ஹூண்டாய் வாகனங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த பிரச்சினை காரணமாக இதுவரை 11 தீ விபத்துக்கள் ஏற்பட்டுள்ள போதிலும், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
"உற்பத்தியாளர்கள் காரில் உள்ள ஆண்டி-லாக் பிரேக் சிஸ்டத்தில் எலெக்ட்ரிக்கல் ஷாட் சர்கியூட் ஏற்படும் அபாயம் இருப்பதாக நம்புகின்றனர். இது கார் இயக்கினாலும், இயக்காமல் நிறுத்தப்பட்டு இருந்தாலும் தீப்பிடிக்கும் அபாயம் உள்ளது. எனவே வாகனம் ஆஃப் செய்யப்பட்ட நிலையிலும், அருகில் மற்ற வாகனங்கள் இல்லாத திறந்த வெளியில் பார்க்க செய்ய வேண்டும்," என அமெரிக்க பாதுகாப்பு அமைப்பான தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் தெரிவித்து இருக்கிறது.