பெட்ரோல் டீசல் மீதான வரியை மாநில அரசுகள் குறைக்கும் - மத்திய அமைச்சர் நம்பிக்கை...
பெட்ரோல், டீசல் மீதான வரியை மாநில அரசுகள் குறைக்கும் என நம்புவதாகவும், மத்திய அரசு குறைத்துள்ள வரியை போன்று மாநில அரசுகள் குறைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது எனவும் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் மீதான விலையை மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றியமைத்து வந்தது.
ஆனால் கடந்த ஜூன் மாதம் முதல் தினமும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.
இதனால் இதுவரை பெட்ரோலும், டீசலும் லிட்டருக்கு சுமார் பத்து ரூபாய் வரை அதிகரித்து இருக்கிறது.
எனவே இதை கைவிட வேண்டும் என்ற கோரிக்கை நுகர்வோர் தரப்பில் நாடு முழுவதும் எழுந்துள்ளது.
இந்நிலையில், சர்வதேச சந்தையில் விலை உயர்ந்ததால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சுமையை குறைக்க மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான அடிப்படை கலால் வரியை லிட்டருக்கு இரண்டு ரூபாய் வீதம் குறைத்து உத்தரவிட்டுள்ளது.
இதை தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை குறைத்தால் மக்கள் சுமை இன்னும் குறையும் என மத்திய அரசு மாநில அரசை வலியுறுத்தியது.
இதனால், குஜராத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை ரத்து செய்து முதலமைச்சர் விஜய் ரூபானி உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், பெட்ரோல், டீசல் மீதான வரியை மாநில அரசுகள் குறைக்கும் என நம்புவதாகவும், மத்திய அரசு குறைத்துள்ள வரியை போன்று மாநில அரசுகள் குறைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது எனவும் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.