நடவு பணிக்கு சென்ற பெண்களை ஏமாற்றி ஆர்ப்பாட்டத்திற்கு அழைத்து வந்த பாஜகவினர்? பெண்கள் குமுறல்

Jan 12, 2024, 12:24 PM IST

திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பூண்டி ஒன்றியத்தில் அடிப்படை வசதிகளை செய்து தராத மாநில அரசையும், பூண்டி வட்டார வளர்ச்சி துறை அதிகாரிகளை கண்டித்து பூண்டி பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது, இதில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் பாரதிய ஜனதா  மாவட்ட பொதுச் செயலாளர் கருணாகரன் கலந்து கொண்டார்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் அருகாமையில் உள்ள கிராமங்களில் இருந்து டிராக்டர் மூலம் பாதுகாப்பாற்ற முறையில் பெண்களை ஏற்றி வந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்க செய்து, பின்னர் வெயிலின் தாக்கம் அதிகரிக்க அதிகரிக்க கூட்டத்திலிருந்து பெண்கள் பயணியர் நிழற்குடையை தேடியும், மரம் நிழலை தேடியும் சென்று விட்டதால் ஆர்ப்பாட்டத்தில் கூட்டம் இன்றி வெறிச்சோடியாது.

இதனால் கலக்கமடைந்த நிர்வாகிகள் மரநிழலை தேடிச் சென்ற பெண்களை வலுக்கட்டாயமாக அழைத்து வந்து கூட்டத்தில் கலந்துக்க செய்தனர். பின்னர் பசி நேரம் என்பதால்   அனைத்து பெண்களும் சாப்பாட்டு அண்டா வைத்திருந்த பகுதியை நோக்கி படையெடுத்ததால்  அவசர அவசரமாக ஆர்ப்பாட்டத்தை முடித்துக்கொண்டனர்,

இதனிடையே அப்பகுதியில் வந்த பெண்மணி ஒருவரிடம் கேட்டபோது நடவு பணிக்கு சென்று கொண்டிருந்தபோது தங்களுக்கு 200 ரூபாய் கொடுக்கிறோம் என்று அழைத்து வந்ததாகவும், இப்போ எதுவுமே கொடுக்கல என மனம் கலக்கம் அடைந்து கூறினார்.