பயணிகளின் உயிரை பணயம் வைக்கும் ஓட்டுநர்கள்; கரூரில் நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்

Feb 27, 2024, 6:04 PM IST

கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் பகுதியில் இருந்து தண்ணீர் பந்தல் பாளையம் வழியாக கரூர் பேருந்து நிலையத்திற்கு செல்ல நகர பேருந்து ஒன்று, நகர எல்லைக்குள் வையாபுரிநகர் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது சேலத்தில் இருந்து மதுரை செல்லும் நீண்ட தூர அரசு பேருந்து ஒன்று, அவ்வழியாக வந்து கொண்டிருந்தது. அந்தப் பேருந்தை இயக்கி வந்த ஓட்டுநர் பொறுமையின்மை காரணமாக அதிவேகத்தில் நகரப் பேருந்தை முந்தி செல்ல முயற்சி செய்துள்ளார். 

அதனால் இரண்டு பேருந்துகளும் ஒன்றோடு ஒன்று உரசி நின்றன. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக இரண்டு பேருந்துகளிலும் பயணம் செய்த பயணிகள் நூலிழையில் உயிர் தப்பினர். மேலும், விபத்து ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுநருடன், நகரப் பேருந்து ஓட்டுநர், பொதுமக்கள் மற்றும் பயணிகளும் வாக்குவாதம் செய்தனர்.

இரண்டு பேருந்துகளும் ஒன்றோடு ஒன்று உரசி ஏற்பட்ட விபத்தின் காரணமாக அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ் மற்றும் வாகனங்கள் ஒருவழிப்பாதையில் மாற்றி விடப்பட்டன.