அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறை; கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் அகற்றப்படாத விளம்பரங்கள்

Mar 16, 2024, 6:39 PM IST

தமிழகம் உட்பட நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அடுத்த நொடியே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததாக அர்த்தனம். இந்நிலையில், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் திட்டங்கள் குறித்த பிளக்ஸ் பேனர்கள், விளம்பர பதாகைகள் அகற்றப்படவில்லை.

அரசு திட்டங்கள் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோர் புகைப்படங்களுடன் இடம்பெற்றுள்ள விளம்பர பதாகைகள் அகற்றும் பணிகள் இதுவரை துவங்கவில்லை.

இதேபோல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு பிரதமர் மோடி புகைப்படத்துடன் வைக்கப்பட்டுள்ள மத்திய அரசின் சூரிய ஒளி மின்சார திட்டத்திற்கான விளம்பர பதாகையும் அகற்றவில்லை. பாராளுமன்ற தேர்தல் தேதி இன்று பிற்பகல் 3.00 மணிக்கு வெளியாகும் என்று நேற்றே அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.