உங்க அக்கப்போருக்கு அளவே இல்லையா? நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அலறவிட்ட இளைஞர்கள்!

Apr 26, 2024, 12:47 PM IST

புதுச்சேரி குறிஞ்சி நகர் பகுதியில் நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்  தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தமிழகத்தில் அரியலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். இன்று வரை சிறுத்தைகளை பிடிக்காமல் இருப்பதாலும் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் பகுதியில் நாய்க்கு புலி வேடமிட்டு அந்த நாயை வீதியில் இளைஞர்கள் உலாவிட்டனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் மற்றும் அவ்வழியே  சென்றவர்கள் ஊருக்குள் புலி தான் வந்துவிட்டது என்று அச்சமடைந்தனர். மேலும் இந்த செய்தி அந்த பகுதியில் காட்டு தீயாகவும் பரவியது.

இதனை அடுத்து சில இளைஞர்கள் கிட்டே சென்று பார்த்தபோது நாய்க்கு புலி வேடமிட்டு இருப்பது தெரியவந்தது. பொதுமக்களை அச்சுறுத்தவே சில இளைஞர்கள் இதுபோன்ற விஷமத்தனங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து நாய்க்கு புலி வேடமிட்டு வீதியில் உலாவிட்ட இளைஞர்கள் அதை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

 மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணையும் செய்து வருகின்றனர். தமிழகத்தில் சிறுத்தைகள் நடமாட்டம் இருக்கும் நிலையில் நாய்க்கு புலிவேடமிட்டு அதை வீதியில் உலாவிட்ட சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.