Watch : புதுவை எம்எல்ஏ நேரு விவகாரம்! தலைமை செயலாளருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு!

Jun 7, 2023, 5:09 PM IST

புதுச்சேரி மாநில தலைமை செயலர் ராஜீவ் வர்மாவை சுயேட்சை எம்எல்ஏ நேரு அரசு விழாவில் புகுந்து விமர்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக எம்எல்ஏ நேரு மீது வழக்குபதிவு செய்யப்பட்ட நிலையில் தலைமை செயலருக்கு எதிராக பல்வேறு சமூக அமைப்புகள் குரல் எழுப்பின. தலைமை செயலர் மீது உரிமை மீறல் புகார் அளிக்கப்பட்ட நிலையில், ஆளுநர் தமிழிசையை முதல்வர் ரங்கசாமி நேற்று அவசரமாக சந்தித்து பேசினார். அதன்பிறகு தலைமை செயலருக்கு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அவர் போலீஸ் பாதுகாப்புடன் சட்டசபைக்கு வந்து சபாநாயகர் செல்வத்தை சந்தித்து புறப்பட்டு சென்றார்.

இந்த நிலையில் புதுச்சேரி தலைமை செயலகத்தை சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளன. அங்கு பேரிகார்டுகள் போடப்பட்டு 24 மணி நேர போலீஸ் கண்காணிப்பு போடப்பட்டுள்ளது. தலைமை செயலகத்துக்கு வரும் பொதுமக்கள் தீவிர பரிசோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். அங்கு அதிகாரிகளை சந்திக்க பல்வேறு கட்டுப்பாடுகளை காவல்துறை விதித்துள்ளது. எந்த நேரத்திலும் மக்கள் பிரதிநிதிகள் அங்கு பொதுமக்களை திரட்டி போராட்டத்தில் குதிக்கலாம் என்பதால் தலைமை செயலகத்தை சுற்றிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள,  பாதுகாப்பு நடவடிக்கைகளால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.