Latest Videos

Stalin : நீட் விலக்கு..மத்திய அரசுக்கு அழுத்தம்-சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தனித்தீர்மானம் நிறைவேறியது

By Ajmal KhanFirst Published Jun 28, 2024, 11:55 AM IST
Highlights

பல முறைகேடுகளுக்கு வழிவகுத்து வரும் இந்தத் தேர்வு முறையை பல்வேறு மாநிலங்களும் தற்போது எதிர்த்து வரும் நிலையில், தேசிய அளவில் நீட் தேர்வு முறை கைவிடப்படும் என தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
 

நீட் தேர்விற்கு எதிராக தீர்மானம்

பல முறைகேடுகளுக்கு வழிவகுத்து வரும் இந்தத் தேர்வு முறையை பல்வேறு மாநிலங்களும் தற்போது எதிர்த்து வரும் நிலையில், தேசிய அளவில் நீட் தேர்வு முறை கைவிடப்படும் வகையில் தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தில் தேவைப்படும் திருத்தங்களை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டுமென்றும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின் மீது பேசிய அவர்,  பள்ளிக்கல்வி மதிப்பெண்களின் அடிப்படையில்,  சமூகநீதியையும், அனைத்துப் பிரிவு மாணவர்களுக்கு சமவாய்ப்பையும் உறுதிசெய்யக்கூடிய முன்னோடி சேர்க்கை முறையை நாம் பின்பற்றி வருகிறோம்.

 இந்த முறையால்தான் தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் மருத்துவர்கள் உருவாகவும், அனைத்துப் பகுதிகளுக்கும் சிறப்பான மருத்துவ சேவைகளை வழங்கிடவும் முடிந்தது. ஆனால் 2017 ஆம் ஆண்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வை ஒன்றிய அரசு கட்டாயமாக்கிய பின்பு, இந்த நிலை முற்றிலும் மாறி, மருத்துவப் படிப்பு என்பது ஏழையெளிய மாணவர்களுக்கு எட்டாக்கனி ஆகிவிட்டது.

Vijay: யாரும் விஜய் கிட்டகூட நெருங்க முடியாது...துபாயில் இருந்து களமிறக்கப்பட்ட பயில்வான்கள் -யார் சாமி இவங்க?  

சட்டமன்றத்தில் சட்டமுன்வடிவு

பயிற்சி வகுப்புகளுக்குச் செல்ல முடியாத கிராமப்புற, ஏழையெளிய மாணவர்களால் இந்தத் தேர்வில் வெல்ல இயலாது. அதுமட்டுமல்ல; கிராமப்புறப் பகுதிகளிலும் பின்தங்கிய பகுதிகளிலும் வழங்கப்படும் மருத்துவ சேவைகளையும் எதிர்காலத்தில் இந்த முறை பாதிக்கும்.  இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான், நீட் நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்தே, அதனை அரசியல்ரீதியாகவும், சட்டரீதியாகவும் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம்.  ஓய்வுபெற்ற நீதியரசர் திரு. ஏ.கே.இராஜன் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், இந்தச் சட்டமன்றப் பேரவையில் 13.09.2021 அன்று தமிழ்நாடு மருத்துவப் பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கைச் சட்டம், 2021 என்ற சட்டமுன்வடிவு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 

ஒப்புதல் அளிக்காத மத்திய அரசு

ஆனால், நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகும் மாண்புமிகு ஆளுநரால் அதற்கான ஒப்புதல் வழங்கப்படாமல், மறுபரிசீலனை செய்திட திருப்பி அனுப்பப்பட்டது. இந்நிலையில், என் தலைமையில் 05.02.2022 அன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட்டு, இந்தச் சட்டமுன்வடிவினை மீண்டும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிமுகப்படுத்துவது தொடர்பான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, 08.02.2022 அன்று சட்டமுன்வடிவு மீண்டும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஒன்றிய அரசுக்கு மாண்புமிகு ஆளுநரால் அனுப்பப்பட்டு, இதுகுறித்து  ஒன்றிய அரசால் கோரப்பட்ட  அனைத்து விளக்கங்களுக்கும் தமிழ்நாடு அரசு உடனுக்குடன் உரிய பதில்களை வழங்கியுள்ள நிலையிலும், இதற்கு ஒப்புதல் அளிக்காமல் ஒன்றிய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வின் போது அரங்கேறியுள்ள சம்பவங்கள், போட்டித் தேர்வுகளில் மீது நமது மாணவர்கள் வைத்துள்ள நம்பிக்கையையே நிலைகுலையச் செய்துள்ளன.

இந்தியாவின் குரலாக உள்ளது

இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்து, தவறே நடைபெறவில்லை என்று கூறிய ஒன்றிய அரசு, பின்பு மாண்பமை உச்சநீதிமன்றத்தில் குட்டு வாங்கிய பின்னரே, இந்தத் தேர்வை நடத்தும் NTA அமைப்பின் தலைவரை மாற்றியுள்ளது. தேர்வு முறைகேடுகள் குறித்து எழுப்பப்படுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிட்டுள்ளது. முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பல ஆண்டு காலமாக நீட் தேர்வுக்கு எதிராக, தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் தனியே போர் தொடுத்து வந்த நிலையில்,  நீட் தேர்வின் உண்மையான அவலநிலையை உணர்ந்து, பல்வேறு மாநிலங்களிலும் இதற்கு எதிரான எதிர்ப்பு கிளம்பி வருகின்றது.  தமிழ்நாட்டின் குரல் இன்று இந்தியாவின் குரலாக நாடு முழுவதும் எதிரொலிப்பதை அண்மை நிகழ்வுகள் காட்டுகின்றன. 

“மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை மாநில அரசுகளே முடிவெடுத்த பழைய நிலையை மீண்டும் கொண்டு வர வேண்டும்” என  மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள், பிரதமருக்கே கடிதம் எழுதியுள்ளார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி, உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் திரு. அகிலேஷ் யாதவ், பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் திரு.தேஜஸ்வி யாதவ் எனப் பலரும் நீட் தேர்வை இரத்து செய்ய வலியுறுத்திக் கடிதம் எழுதியிருக்கிறார்கள். இந்தச் சூழலில் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெற நாம் எடுத்த முயற்சிகளை வெற்றியடைய செய்யவும், தேசிய அளவில் நீட் தேர்வை அறவே அகற்றிடவும் தேவையான முன்னெடுப்பாக, இந்த மாமன்றம் பின்வரும் தீர்மானத்தை நிறைவேற்றித் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

Seeman : பாமகவிற்கு செக் வைக்கும் நாம் தமிழர்; இரட்டை இலையை கவருவதற்கு சீமான் செய்த சூட்சமம்; கை கொடுக்குமா?

சட்டசபையில் தீர்மானம்

“கிராமப்புற, ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக்கல்வி வாய்ப்புகளை கடுமையாக பாதிக்கும் வகையிலும், பள்ளிக் கல்வியை அவசியமற்றதாக்கும் வகையிலும், மாநில மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்கும் உரிமையை மாநில அரசுகளிடம் இருந்து பறிக்கும் வகையிலும் அமைந்துள்ள நீட் தேர்வு முறை அகற்றப்பட வேண்டும்.

இந்தத் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளித்து, பள்ளிக் கல்வியில் மாணவர்கள் பெறும் 12-வது வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை மேற்கொள்வதற்காக, இந்தச் சட்டமன்றப் பேரவை ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பிய நீட் விலக்கு சட்டமுன்வடிவிற்கு ஒன்றிய அரசு உடனடியாக ஒப்புதல் அளித்திட வேண்டுமென்றும், 

 தொடர்ந்து பல முறைகேடுகளுக்கு வழிவகுத்து வரும் இந்தத் தேர்வு முறையை பல்வேறு மாநிலங்களும் தற்போது எதிர்த்து வரும் நிலையில், தேசிய அளவில் நீட் தேர்வு முறை கைவிடப்படும் வகையில் தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தில் தேவைப்படும் திருத்தங்களை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டுமென்றும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது என தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

Thalapathy Vijay : இந்த முறை வைர நெக்லஸ் இல்லை.... மாணவிகளுக்கு விஜய் கொடுத்த விலையுயர்ந்த பரிசு என்ன?
 

click me!