
தமிழகத்தில் ஜனவரி முதல் மே மாதம் வரை மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்தலாம் என்று அரசு தெரிவித்துள்ளது. ஆண்டுதோறும் ஜனவரி முதல் மே மாதங்களில் மட்டுமே ஜல்லிக்கட்டு, வடமாடு, மஞ்சுவிரட்டு உள்ளிட்டவை நடத்த முடியும் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் விளக்கத்தை ஏற்று மதுரை பள்ளப்பட்டியில் ஸ்ரீ முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் வடமாடு மஞ்சுவிரட்டுக்கு அனுமதி கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஜனவரி முதல் மே மாதம் வரையே ஜல்லிக்கட்டு, வடமாடு, மஞ்சுவிரட்டு போட்டிகள் நடத்த ஆட்சியர் அனுமதி வழங்க இயலும் என விதிமுறை உள்ளது என்று தமிழக அரசு உயர்நீதிமன்ற மதுரைகிளையில் விளக்கம் அளித்துள்ளது.
மேலும் படிக்க:விளம்பரம் தேடும் முதலமைச்சர்.! சட்டமன்ற தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்..ஸ்டாலின் மீது சீறிய ஜெயக்குமார்
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே பூமங்கலப்பட்டியைச் சேர்ந்த செல்லம், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதில் பள்ளப்பட்டியில் உள்ள சோலை ஆண்டவர் சாமி கோயில் மற்றும் சித்தி விநாயகர் கோயில் குடமுழுக்கு விழா நடக்கவுள்ளது. அதனை முன்னிட்டு ஜூன் 12ல் வடமாடு, மஞ்சுவிரட்டு நடத்த முடிவு செய்துள்ளதாகவும் போட்டி நடைபெற உள்ள இடத்திற்கு உரிய அனுமதி பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தாசில்தாரின் பரிந்துரைப்படி ஆர்டிஓ விசாரித்து, அவரும் பரிந்துரைத்துள்ளதாகவும் இன்சூரன்ஸ் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளாது. ஆனால், வடமாடு, மஞ்சுவிரட்டு நடத்த மாவட்ட ஆட்சியர் அனுமதி மறுத்துள்ளார். அவரது உத்தரவை ரத்து செய்து, வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதிக்குமாறும், உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறும் உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:மாணவர்களே உஷார் !! பி.இ கல்லூரிகளில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.. அமைச்சர் சொன்ன புது தகவல்..
இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், எஸ்.ஸ்ரீமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜாரான கூடுதல் வக்கீல் ரவி , ‘‘மதுரை மாவட்டத்தில் ஜனவரி மாதத்தில் இருந்து மே மாதம் வரையில் மட்டுமே ஜல்லிக்கட்டு தொடர்பானவை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்த குறிப்பிட்ட காலத்தை கடந்ததால் மாவட்ட ஆட்சியர் நிராகரித்துள்ளார். ஆட்சியரின் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்ய முடியாது. அரசிடம் முறையிட்டு தான் பரிகாரம் தேட முடியும்’’’’ என்று தெரிவித்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும், மனுதாரர்கள் தரப்பில் அரசிடம் முறையிட்டு உரிய பரிகாரம் தேடிக்கொள்ளலாம் என உத்தரவிட்டுள்ளனர்.