முன்னாள் எம்பி சி. பெருமாள் உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
Former AIADMK MP Perumal passes away : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிமுகவின் முக்கிய நிர்வாகியாக திகழ்ந்தவர் பெருமாள், அதிமுக ஆட்சி கால திட்டங்களை மக்களிடம் கொண்டு சென்றதில் பெருமாள் முக்கிய பங்கு விகித்தார். கட்சிக்காக பல்வேறு போராட்டங்களிலும் கலந்து கொண்டார். இதற்கு பரிசாக மாநிலங்களவை பதவியை வழங்கி அழகு பார்த்தவர் ஜெயலலிதா, இந்த நிலையில் முன்னாள் எம்பி பெருமாள் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டார். இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உடல்நிலை பாதிப்பால் மரணம்
இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டக் கழக பொருளாளரும், முன்னாள் வாரிய துணைத் தலைவரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான C. பெருமாள் அவர்கள் உடல்நலக் குறைவால் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். கழகத்தின் மீதும், கழகத் தலைமையின் மீதும் விசுவாசம் கொண்டு பணியாற்றி வந்த ஆரம்பகால கழக உடன்பிறப்பு பெருமாள் அவர்கள்,
எடப்பாடி பழனிசாமி இரங்கல்
மாவட்ட மாணவர் அணிச் செயலாளர், மாவட்ட புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர், மாவட்டக் கழக அவைத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளில் திறம்பட கழகப் பணியாற்றியதோடு, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர், மாநிலங்களவை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளில் மக்கள் பணிகளையும் திறம்பட ஆற்றியவர். அன்புச் சகோதரர் பெருமாள் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு, எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.