ஒரு நாள் இரவு மட்டும் இவ்வளவா..! இரவு ஊரடங்கில் விதி மீறல்..10 லட்சம் ரூபாய் அபராதம் வசூல்..!

By Thanalakshmi VFirst Published Jan 16, 2022, 3:03 PM IST
Highlights

சென்னையில் நேற்று மட்டும் இரவு ஊரடங்கில் கொரோனா விதிமீறல் தொடர்பாக 5 ஆயிரத்துக்கு மேல் வழக்கு பதியப்பட்டு,சுமார் 10 லட்சம் ரூபாய் அபாரதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
 

சென்னையில் இரவு நேர முழு ஊரடங்கில், கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறியது தொடர்பாக நேற்று மட்டும் 103 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 307 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவையன்றி முகக்கவசம் அணியாதது தொடர்பாக 5,469 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.10,93,800/- அபராதமும், சமூக இடைவெளி கடைபிடிக்காதது தொடர்பாக 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.13,500 அபராதமும் வசூலிக்கப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு, தமிழக அரசு 06.01.2022 முதல் 31.01.2022 வரை வார நாட்களில் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரையில் இரவு நேர முழு ஊரடங்கும், ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுகிழமையன்று முழு நேர ஊரடங்கு பணிகளை தீவிரப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு, சென்னை பெருநகர காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதியில் மொத்தம் 312 வாகன தணிக்கை சாவடிகள் அமைக்கப்பட்டு சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து மற்றும் ஆயுதப்படையைச் சேர்ந்த 10 ஆயிரம் காவல் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கில் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகள் மீறியது தொடர்பாக 103 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இவற்றுடன் சென்னை பெருநகர காவல் துறை தெரிவித்துள்ள தகவலில், “அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றிய 280 இருசக்கர வாகனங்கள், 16 ஆட்டோக்கள் மற்றும் 11 இலகுரக வாகனங்கள் என மொத்தம் 307 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. நேற்று (15.01.2022) கொரோனா தடுப்பின் முக்கிய வழிகாட்டுதல் நெறிமுறையான முகக்கவசம் அணியாதது தொடர்பாக 5,469 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.10,93,800 அபராதமும், சமூக இடைவெளி கடைபிடிக்காதது தொடர்பாக 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.13,500 அபராதமும் வசூலிக்கப்பட்டது.

இன்று (16.01.2022) ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால், சென்னை பெருநகர காவல் குழுவினர் நாளை (17.01.2022) காலை 5 மணி வரை தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவதால், பொதுமக்கள் மிக அத்தியாவசிய தேவையின்றி வெளியில் வருவதை தவிர்க்கவும்” என குறிப்பிட்டுள்ளது.

click me!