சினிமாவை மிஞ்சிய பயங்கரம்! குடோனில் வெடித்து சிதறிய சிலிண்டர்கள்!தூக்கி வீசப்பட்ட பொதுமக்கள்!12 பேர் படுகாயம்

By vinoth kumarFirst Published Sep 29, 2022, 9:00 AM IST
Highlights

குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் வெப்பம் தாங்க முடியாமல் கேஸ் குடோனில் இருந்த கேஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியுள்ளது. இதனால், சத்தத்தை கேட்டு அதிர்ந்துபோன பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு வீட்டில் இருந்து வெளியேறினர்.

வாலாஜாபாத் அருகே கேஸ் சிலிண்டர்கள் அடுத்தடுத்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில், 12க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.  90 சதவீத தீக்காயங்களுடன் 6 பேர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். 

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அடுத்த தேவரியம்பாக்கம் பெருமாள் கோயில் தெருவில் ஏ.எஸ்.என் கேஸ் ஏஜென்சி என்ற பெயரில் தொழிற்சாலைகளில் உள்ள உணவகங்களுக்கு கேஸ் சிலிண்டர்களை சப்ளை செய்யும் நிறுவனத்தை ஜீவானந்தம் என்பவர் நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தில் வடமாநிலத்தை சேர்ந்த 15க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்து வருகின்றனர்.

நேற்று மாலை வழக்கம் போல் வாகனங்களில் இருந்து கேஸ் சிலிண்டர்களை தொழிற்சாலைகளில் இறக்கிவிட்டு, ஊழியர்கள் மீண்டும் குடோனுக்கு வந்துள்ளனர். அப்போது, குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் வெப்பம் தாங்க முடியாமல் கேஸ் குடோனில் இருந்த கேஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியுள்ளது. இதனால், சத்தத்தை கேட்டு அதிர்ந்துபோன பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு வீட்டில் இருந்து வெளியேறினர்.

இந்த சம்பவம் தொடர்பாக உடனே போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் ததகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பலத்த தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 12 பேரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில், 90 சதவீத தீக்காயம் ஏற்பட்ட 6 பேர் மேல்சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

click me!