ஆளுநர், முதல்வர் பிரச்சினையை ஓரங்கட்டுங்க; முதல்ல இதுக்கு தீர்வு சொல்லுங்க - அன்புமணி கோரிக்கை

By Velmurugan sFirst Published Jan 11, 2023, 10:04 AM IST
Highlights

முதல்வருக்கும், ஆளுநருக்கும் இருக்கும் பிரச்சினையை விட முதலில் நொய்யலாற்றை மீட்க வேண்டும் என்பதே பெரிய பிரச்சினை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்க விடுத்துள்ளார்.

பசுமை தாயகம் சார்பில் நடைபெறும் "நொய்யல் ஆற்றை மீட்டு எடுப்போம்" என்ற தலைப்பில் நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்பதற்காக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோவை வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், பசுமை தாயகம் சார்பில் நொய்யலாற்றை மீட்டு எடுப்போம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இதன் நோக்கம் நொய்யல் ஆற்றை மீட்டு எடுக்க வேண்டும், நொய்யலை காப்பற்ற வேண்டுமென்ற நிலை போய் மீட்க வேண்டும் என்ற நிலையில் உள்ளோம். இது முதற்கட்ட முயற்சி, அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு நொய்யலை மீட்டு எடுக்க வேண்டும்.

"நொய்யல் நலம் பெறட்டும் கொங்கு வளம் பெறட்டும்", சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து நொய்யலை பாதுகாத்தனர் 32 அணை, குளம் மற்றும் ஏரிகளை உருவாக்கி இந்த பகுதியில் வளர்ச்சிக்கான திட்டத்தை வகுத்தனர். நொய்யலாற்றில் சுமார் 4.5 லட்சம் ஏக்கர் நிலம் பாசனம் பெற்று வந்தது. 

குடிநீர் விவசாயம் என அனைத்தும் நொய்யலாற்றை நம்பி இருந்தது ஆனால், 40 ஆண்டு காலமாக திடக்கழிவு, ரசாயன கழிவு, சாயக்கழிவுகள், சாக்கடை கழிவு, மணல் கொள்ளை, செங்கல் சூளை மணல் கொள்ளை, போன்ற செயல்களாலும் ஆக்கிரமிப்புகளாலும் பாதிக்கபட்டுள்ளது. எனவே கண்டிப்பாக இந்த ஆற்றை காப்பாற்ற வேண்டும். மக்களை ஒன்றிணைத்து நொய்யலை மீட்டு எடுப்பேன் என்ற நம்பிக்கையில் இங்கு வந்துள்ளேன். இது ஒரு கூட்டு முயற்சி. அரசு, பொதுமக்கள், அனைத்து தரப்பட்ட மக்களும் இணைந்து செயல்பட வேண்டும். 

கோவை குண்டு வெடிப்பு: குற்றவாளிகளை வனப்பகுதிக்குள் அழைத்துச் சென்று அதிகாரிகள் அதிரடி விசாரணை

கூவத்தை சுத்தம் செய்ய மாறி மாறி ஆண்ட கட்சிகள் 4000 கோடி முதலீடு செய்துள்ளனர். ஆனால் கூவம் கூவமாக தான் இருக்கிறது. எந்த மாற்றமும் இல்லை. இதனை நாம் விஞ்ஞான ரீதியில் அணுக வேண்டும். நொய்யல் உருவெடுத்து 180 கிமீ கடந்து காவிரியில் கலக்கிறது. குடிக்கும் நிலையில் இருக்கும் நொய்யலாறு கோவையிலிருந்து கெடுகின்ற சூழல் உள்ளது. அரசு சில நூறு கோடிகளை ஒதுக்கினால் போதாது ஆயிரக்கணக்கான கோடிகளை செலவு செய்ய வேண்டும். 

நொய்யல் உற்பத்தியாகும் மலை பகுதியில் உள்ள காடுகளை மீட்டு எடுக்க வேண்டும். காடுகளை அழித்துவிட்டனர். பல்வேரு கழிவுகள் நொய்யலுக்கு தான் செல்கிறது. சுத்திகரிப்பு என்பதே இல்லாமல் திருப்பூரில் தான் அதிகளவில் மாசடைகிறது. உலகில் பல நாடுகளில் பல்வேரு நதிகளை மீட்டு எடுத்துள்ளனர். அரசியல் நோக்கம் பாராமல் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

நமக்கு இனிவரும் காலங்களில் மிகப்பெரிய சவாலாக உள்ளது பருவ நிலை மாற்றமே. அதனை நாம் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். ஆளுனரும் ஆளும் கட்சியும் இணைந்து தமிழக முன்னேற்றத்திற்கு செயல்பட வேண்டும், ஆளுநர் அரசியல் செய்யக்கூடாது, தமிழக அரசும் ஆளுனரை மதிக்க வேண்டும், ஆளுநர் அரசியல் சாசன பொறுப்பில் இருப்பவர்.

கோவையில் ஆளுநர் ரவியின் உருவ பொம்மை எரிப்பு.. குண்டுகட்டமாக தூக்கிய போலீஸ்..!

ஆன்லைன் சூதாட்டம் காரணமாக வாரம் ஒரு தற்கொலை, தற்கொலை செய்பவர்களின் குடும்பம் நிற்கதியில் நிற்கிறது. ஆனால் ஆளுநர் கையெழுத்து போடாமல் காலம் தாழ்த்துவது ஏன் என்று தெரியவில்லை. தேசிய கீதத்தில் திராவிடம் வரும் நிலையில் திராவிடம் என்ற வார்த்தையை ஆளுநர் பாடாமல் விட்டு விடுவாரா? திராவிடத்தில் எனக்கு உடன்பாடு கிடையாது. இருந்தாலும் நான் பாடித்தான் ஆகவேண்டும். 

முதல்வருக்கும் ஆளுநருக்கும் இருக்கும் பிரச்சினையை விட நொய்யலை மீட்க வேண்டிமென்பது மிகப்பெரிய பிரச்சினை விவசாயிகள், விவசாயம் , கோடிக்கணக்கான இளைஞர்களின் வேலை வாய்ப்பு தொடர்பாக விவாதம் செய்யுங்கள் என்றார். மேலும் 2026ல் பாமக தலைமையிலான கூட்டணிக்கட்சி ஆட்சிக்கு தான் நாங்கள் வியூகங்களை வகுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

click me!