வால்பாறை மலை கிராமத்தில் 14 கி.மீ. நடந்தே சென்று ஆய்வு செய்த அமைச்சர் சுப்பிரமணியன்

By Velmurugan sFirst Published Sep 14, 2023, 6:36 PM IST
Highlights

கோவை மாவட்டம் வால்பாறை சின்கோனா தேசிங்குடி மலைவாழ் குடியிருப்பில் நடமாடும் மருத்துவ முகாமை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 14 கிலோமீட்டர் நடந்து சென்று துவக்கி வைத்தார்.

கோவை மாவட்டம், வால்பாறை அடுத்த சின்கோனா தேசிங் குடி மலைவாழ் மக்கள் குடியிருப்பில் நடைபெற்ற மக்களை தேடி மருத்துவ முகாமினை, தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அந்த மலைகிராமத்திற்கு 14 கிலோ மீட்டர் நடந்து சென்று துவக்கி வைத்தார். மக்களை தேடி மருத்துவ முகாம் திட்டத்தின் மூலம் நடமாடும் மருத்துவ முகாம், சிறுநீரக பரிசோதனை நடைபெறுவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டிய அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், கோவை மாவட்டம், சின்கோனா அருகே உள்ள மலைவாழ் மக்கள் கிராமத்திற்கு அதிகாரிகள் உள்ளிட்டோருடன் ஆய்வு மேற்கொள்ள 14 கிலோ மீட்டர் நடந்தே வந்துள்ளோம். முதல்வர் அவர்களால்  துவக்கி வைக்கப்பட்ட மக்களை தேடி மருத்துவம் திட்டம், மலைவாழ்வு மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. 

காவிரி விவகாரம்; முதல்வர் ஸ்டாலினின் புகைப்படத்தை கிழித்து வாட்டாள் நாகராஜ் அட்டூழியம் - வேடிக்கை பார்த்த போலீஸ்

பொதுவாக மருத்துவதுறையால் மலைவாழ் கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டு இருந்தது. அதேசமயம், 2021ம் ஆண்டு தமிழக முதல்வர் அவர்களால் இத்திட்டம் துவக்கப்பட்டதில் இருந்தே மலைவாழ் மக்களுக்கு பயனுள்ள மகத்தான திட்டமாக உள்ளது. மலை உச்சியில் ஒரு வீடு இருந்தாலும் அங்கும் இந்த நடமாடும் மருத்துவ முகாம் சென்று மருத்துவம் செய்ய பேருதவியாக உள்ளது. 

இந்த ஊரைப் பொறுத்தவரை 140 குடியிருப்புகள் உள்ளன. இதில் 8 பேருக்கு உயர் அழுத்த இரத்த நோய் இருப்பது கண்டறியப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக மருந்து பெட்டகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இன்றைய பரிசோதனையில் மேலும் ஒருவருக்கு இந்த பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு அவருக்கும் மருந்து பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி,  சிறுநீரகம் பாதுகாப்போம் என்ற திட்டம் கடந்த மாதம் துவங்கப்பட்டது. அதன்படி இன்று சீறுநீரக பரிசோதனை  முகாம் நடைபெற்றது.

பள்ளி மாணவனா? சிறை கைதியா? தலைமை ஆசிரியரின் காட்டுமிராண்டி தனத்தால் பெற்றோர் ஆவேசம்

மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கான ஒருங்கிணைந்த போதை மீட்பு, மற்றும் பின்பேறு கால, தாய் சேய்நல, தாய் சேய் மனநலம் காணுவதற்கான பயிற்சி  ஆகியவற்றை துவக்கி வைத்து, அதற்கான கையேடுகள் மற்றும் சுவரொட்டிகள், நோட்டீஸ்களை வெளியிட்டுள்ளது. மேலும், வால்பாறை பகுதியில் கடந்த ஏப்ரல் மாதத்தில் நாங்கள் துவக்கி வைத்த கட்டிடம், வால்பாறை மருத்துவமனைக்கு கூடுதலாக பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி தர உள்ளது. இந்த கட்டிட பணிகள் 80 சதவீதம் முடிவடைந்துள்ளது. இந்த கட்டிடம் அக்டோபர் இறுதியில் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வர உள்ளது என்றார்.

இதனைத் தொடர்ந்து, பொள்ளாச்சி அடுத்த தமிழக - கேரள எல்லைப்பகுதியான மீனாட்சிபுரம் சோதனை சாவடியில், கேரளாவில் இருந்து வரும் நபர்களை எல்லையில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு வரும் சுகாதார மற்றும் மருத்துவ துறையினரின் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

click me!