கோவையில் மீன் பிடிக்கும் ஆசையில் குளத்தில் விழுந்து உயிரிழந்தவரால் பரபரப்பு

By Velmurugan sFirst Published Nov 17, 2023, 3:56 PM IST
Highlights

கோவை உக்கடம் பெரிய குளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த உக்கடம் பகுதியைச் சேர்ந்த முகமது இக்பால் என்பவர் குளத்தில் தவறி விழுந்து உயிரிழப்பு.

கோவை உக்கடம் பகுதியில் அமைந்துள்ள பெரிய குளத்தில் மீன்கள் வளர்த்து விற்பனை செய்ய மாநகராட்சியின் சார்பில் டெண்டர் விடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அந்த குளத்தில் மீன் வளர்ப்பு நடைபெற்று வருகிறது. மேலும் அவ்வப்போது குத்தகைதாரர்கள் மீன்களைப் பிடித்து விற்பனையிலும் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த உக்கடம், ஆத்துப்பாலம், கரும்புக்கடை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தூண்டில்கள் மூலமாக மீன் பிடித்து வருவது வாடிக்கையாக இருக்கிறது. இந்த நிலையில் இன்று காலையில் உக்கடம் பகுதியைச் சேர்ந்த முகமது இக்பால் என்பவர் மீன் பிடித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். 

இதை அப்பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டு இருந்தவர்கள் பார்த்து தகவல் அளித்ததின் அடிப்படையில் கோவை பெரியகடை வீதி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

click me!