
இந்திய அணியின் முக்கியமான பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயர். 2019 ஒருநாள் உலக கோப்பைக்கான இந்திய அணியில் 4ம் வரிசையில் இறங்குவதற்கு பரிசோதிக்கப்பட்ட வீரர்களில் ஒருவர். 2017ல் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் களமிறங்கி ஷ்ரேயாஸ் ஐயர் அபாரமாக ஆடியபோதிலும், காரணமே இல்லாமல் ஒதுக்கப்பட்டார். 2019 உலக கோப்பைக்கான இந்திய அணியில் அவருக்கு இடமும் கிடைக்கவில்லை.
அதன்பின்னர் மீண்டும் இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் இடம்பிடித்த ஷ்ரேயாஸ் ஐயர் டி20 அணியில் சூர்யகுமார் யாதவிடம் தனது இடத்தை பறிகொடுத்தாலும், ஒருநாள் அணியில் தனக்கான இடத்தை பிடித்தார். ஆனால் இடையிடையே அவர் காயமடைவதுதான் அவருக்கு பெரிய பிரச்னையாக உள்ளது. தோள்பட்டை காயமடைந்து விலகியபோதுதான் சூர்யகுமார் யாதவிடம் இடத்தை இழந்தார்.
இந்த ஆண்டு இந்தியாவில் நடக்கவுள்ள ஒருநாள் உலக கோப்பைக்கான இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் தான் 4ம் வரிசைக்கான முதன்மை வீரர். மேலும் டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பாக ஆடி தனக்கான இடத்தை பிடித்துவிட்டார். இந்நிலையில், முதுகுப்பகுதியில் காயம் காரணமாக ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அண்மையில் நடந்த ஒருநாள் தொடரில் ஆடவில்லை.
ஐபிஎல் முதல் பாதி சீசனிலும் அவர் ஆடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் முதுகில் அறுவை சிகிச்சை கண்டிப்பாக செய்தாக வேண்டும் என்பதால் ஐபிஎல் 16வது சீசனிலிருந்து முழுமையாக விலகியுள்ளார். கேகேஆர் அணியின் கேப்டனான ஷ்ரேயாஸ் ஐயர் விலகியதால், தற்காலிக கேப்டனாக நியமிக்கப்பட்ட நிதிஷ் ராணாவே சீசன் முழுக்க கேப்டனாக தொடர்வார்.
ஐபிஎல்லை தொடர்ந்து நடக்கவுள்ள ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இருந்தும் ஷ்ரேயாஸ் ஐயர் விலகியுள்ளார். டெஸ்ட் அணியில் முக்கியமான வீரராக வளர்ந்துவிட்ட ஷ்ரேயாஸ் ஐயரால் காயம் காரணமாக ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ஆடமுடியாமல்போனது.