
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று 2-0 என இந்திய அணி தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்திய ஆடுகளங்கள் ஸ்பின்னிற்கு சாதகமாக இருக்கும் என்பதால் நேதன் லயன், அஷ்டான் அகர், டாட் மர்ஃபி, குன்னெமன் ஆகிய 4 ஸ்பின்னர்களுடன் இந்தியாவிற்கு வந்தது ஆஸ்திரேலிய அணி.
இந்தியாவிற்கு எதிராக நல்ல ஸ்பின்னர்களை இறக்கி நெருக்கடி கொடுக்க வேண்டும், இந்திய ஸ்பின்னர்களை திறம்பட எதிர்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் தான் இந்தியாவிற்கு வந்தது. ஆனால் அவை இரண்டையுமே அந்த அணி சரியாக செய்யவில்லை. முதல் டெஸ்ட்டில் நேதன் லயன் மற்றும் அறிமுக ஸ்பின்னர் டாட் மர்ஃபி ஆகிய 2 ஸ்பின்னர்களுடன் ஆடியது. அந்த டெஸ்ட்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அந்த அணியின் முக்கியமான மற்றும் இந்த தொடரில் அசத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட லபுஷேன், ஸ்மித், கவாஜா ஆகியோர் அந்தளவிற்கு சிறப்பான பேட்டிங் ஆடவில்லை லபுஷேனும் கவாஜாவும் தலா ஒரு இன்னிங்ஸ் சிறப்பாக ஆடினர். ஆனால் அஷ்வின், ஜடேஜா ஆகிய 2 இந்திய அணியின் சீனியர் ஸ்பின்னர்களை எதிர்கொள்ள ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் திணறுகின்றனர்.
2வது டெஸ்ட்டில் ஒரே செசனில் 9 விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலிய அணி. அந்த குறிப்பிட்ட 2வது இன்னிங்ஸில் ஜடேஜா 7 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். 2வது டெஸ்ட்டின் 2வது இன்னிங்ஸில் வெறும் 113 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி அதிர்ச்சியளித்தது. முதல் டெஸ்ட்டில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்திலும், 2வது டெஸ்ட்டில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் படுதோல்வி அடைந்தது ஆஸ்திரேலிய அணி.
ஹேண்ட்ஸ்கோம்ப், டிராவிஸ் ஹெட், ஸ்மித், லபுஷேன், கவாஜா ஆகிய வீரர்கள் தொடர்ச்சியாக சிறப்பான பேட்டிங்கை ஆடினால் தான் அந்த அணியால் ஜெயிக்க முடியும். ஆனால் இவர்கள் இந்திய அணியின் ஸ்பின்னை எதிர்கொள்ள திணறுகின்றனர்.
முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி ஜெயித்துவிட்ட நிலையில், கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி ஜெயித்தாலும் கூட தொடர் சமன் தான் அடையும். அதனால் தொடரை வெல்லும் வாய்ப்பை ஆஸ்திரேலிய அணி இழந்துவிட்டது. அதேவேளையில், இந்திய அணி 3வது டெஸ்ட்டில் ஜெயித்தால் தொடரை வெல்வதுடன் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலிலும் முதலிடத்திற்கு முன்னேறிவிடும்.
ஆஸ்திரேலிய அணி இப்போதைக்கு ஒயிட்வாஷ் ஆகாமல் தடுத்தாக வேண்டிய நிலையில் உள்ளது. ஏனெனில் அந்தளவிற்கு அந்த அணி மீது இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி ஆடிவருகிறது. அந்த அணி ஆதிக்கம் செலுத்த ஸ்பின் பவுலிங்கை திறம்பட எதிர்கொள்ள வேண்டும். அதற்கு தனது ஆலோசனையை வழங்க தயாராக இருப்பதாக மேத்யூ ஹைடன் தெரிவித்திருக்கிறார்.
ஆஸ்திரேலிய அணி கடைசியாக 2003-2004 இந்திய சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடரை வென்றபோது அந்த அணியில் அங்கம் வகித்த ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான் மேத்யூ ஹைடன், ஆஸ்திரேலிய வீரர்களுக்கு வழிகாட்ட தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள மேத்யூ ஹைடன், இந்தியாவில் ஸ்பின்னை எதிர்கொள்ள திணறிவரும் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு வழிகாட்ட நான் தயார். இதுதொடர்பாக என்னிடம் எப்போது கேட்டாலும் உடனடியாக சம்மதம் தெரிவித்து, அந்த பணியை செய்ய நான் தயாராக இருக்கிறேன். சிறந்த அறிவுரை வேண்டுமென்றால், முன்னாள் வீரர்களை கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஒதுக்கக்கூடாது. அவர்களது உதவியை நாடவேண்டும் என்று என்று ஹைடன் தெரிவித்துள்ளார்.